பக்கம் எண் :

1496தணிகைப் புராணம்

விமல வாழ்வே, அயலாற்கு வழு வறிது ஏற்றித் தம் வழுக்கட்கு இன்மை விளம்புநர் இணக்கம் நூறுமா காட்டி அன்பு நல்காய் என இயைத்துப் பொருள் காண்க.

(34)

 வாழுமா றாக்கை மீட்டும்
           வகுத்திடிற் சீர்த்தி யொன்றே
 சூழுமா றருள்புன் சொல்லுஞ்
           சூழுமே லதனை மாற்றி
 ஆழுமா நரகி னூக்கி
           யடர்ப்பதே நன்று போலும்
 தாழுமா தவர்க்கள் ளூறும்
           தணிகையம் பதியு ளானே.

(கு - ரை.) ஆக்கை - உடம்பு. வகுத்திடின் - படைத்திட்டால். சீர்த்தி ஒன்றே சூழுமாறு அருள் - உன்னுடைய மிக்க புகழையே நினைக்கவும் வாழ்த்தவும் அருளல் வேண்டும். புன் சொல்லும் சூழுமேல் - புன்சொற்களையும் சொல்லக்கூடிய நிலைமையில் என்னை வைக்க விரும்புவாயானால். (அதனினும்) அதனை மாற்றி - அம்மக்கட் பிறப்பினை மாற்றி. நரகின் ஊக்கி - நரகில் வீழ்த்தி, அடர்ப்பதே நன்று - துன்புறுத்துவதே நல்லது.

தணிகையம் பதியுளானே, மீட்டும் ஆக்கை வகுத்திடின் சீர்த்தி ஒன்றே சூழுமாறு அருள்; புன்சொல்லும் சூழுமேல் அதனை மாற்றி நரகின் ஊக்கி அடர்ப்பதே நன்று என வினை முடிவு செய்க. 'போலும்' என்பது உரையசை.

(35)

 பதியுளே கிடந்தும் பாசம்
           பற்றிய வாறும் பின்னர்
 மதியுளே விராய பொல்லா
           மலந்தபு மாறுஞ் சுத்தக்
 கதியுளே கலந்து நிற்கும்
           காட்சியும் தெரித்தாட் கொண்டான்
 ததியுளே நெய்போ னிற்குந்
           தணிகையங் கடவு ளானே.

(கு - ரை.) பதியுளே கிடந்தும் - எங்கும் நீக்கமற இருந்தருளும் இறைவன் நிறைவினுக்குள் அடங்கி யிருக்கவும். பொல்லா மலந்தபு மாறும் - கொடிய மும்மலங்களும் நீங்குமாறும். சுத்தக் கதியுளே கலந்த காட்சியும் - களங்கமற்ற வீடுபேற்றிலே இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலையும். தெரித்து - தெளியும்படி செய்து. ததி - பால். ததி - காரியவாகு பெயர்.