பக்கம் எண் :

1498தணிகைப் புராணம்

 இறந்தவாற் காட்டுக் குற்ற
           மிரிந்தன பொறிக ளைந்தும்
 பறந்தன தோற்ற நான்கும்
           பாறின மலங்கண் மூன்றும்
 வறந்தன வினையி ரண்டு
           மாய்ந்தது பாச மூலம்
 சிறந்தசீர்த் தணிகை நம்மான்
           சிறக்கணித் திட்ட போதே.

(கு - ரை.) பொறிகள் ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. தோற்றம் நான்கு - பை, முட்டை, நிலம், வியர்வை என்னும் இடங்களிலிருந்து தோன்றுவன. மலங்கள் மூன்று - (அவா, சினம், அறியாமை) ஆணவம், கன்மம், மாயை. வினை இரண்டு - நல்வினை, தீவினை. பாசமூலம் - மூலப் பிரகிருதி. சிறக்கணித் திட்டபோதே - கடைக்கண்ணால் பார்த்தருளின அப்போதே.

தணிகை நம்மான் சிறக்கணித் திட்டபோதே இறந்த குற்றம், இரிந்தன பொறிகள் ஐந்தும், பறந்தன தோற்றம் நான்கும், பாறின மலங்கள் மூன்றும், வறந்தன வினை இரண்டும், மாய்ந்தது பாசமூலம் என்க.

இறந்த, இரிந்தன, பறந்தன, பாறின, வறந்தன என்னும் சொற்கள் கழிந்தன என்னும் ஒரே பொருளில் வந்திருத்தல் காண்க. இவ்வாறு வருவது பொருட்பின் வருநிலை அணி.

(39)

 போதமுள் ளடக்கி மேலாம்
           போதமேல் போர்த்து நிற்ப
 வாதனை தாக்கா தின்ப
           வாரியிற் படியும் பொங்கர்
 வீதளை யவிழுங் காவி
           வெற்பிறை யடியார் தங்கள்
 பாதபங் கயங்கள் போற்றும்
           பரிசலால் வேண்டி லேனே.

(கு - ரை.) போதம் - தன்னைப் பற்றிய உணர்வு. மேலாம் போதம் - இறைவனைப் பற்றிய உணர்வு. வாதனை - பிறப்பு இறப்புக்களினால் வரும் துன்பங்கள். இன்ப வாரியில் படியும் - ஆனந்தக் கடலில் முழுகியிருக்கும். வீ - மலர். பரிசு - வரம். வேண்டிலேன் - விரும்பமாட்டேன்.

போதம் உள்ளடக்கி மேலாம் போதம் போர்த்து நிற்ப வாதனை தாக்காது இன்ப வாரியில் படியும் அடியார் பாதபங்கயங்கள் போற்றும் பரிசலால் வேண்டிலேன் என்க.

(40)