பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1507

இளையவர் ஆட்டயர் சோலை ஏலங்காட்டும் சாரல் கிரி புரக்கும் நிமல வாழ்வை மலர் தூவித் தொழுது வினைப்பறம்பு தாக்ககில்லீர். கவற்றும் காலற்கு எவன் செய்வீர் மாந்தீர் என இணைத்துப் பொருள் கொள்க.

(61)

 மாந்தர்காள் விழுங்கிநெடுங் காலமுமி
           ழாவளற்று மறுக வீங்குப்
 போந்ததோர் சிறுவரையின் வினைவிளைத்தீ
           ருய்யுமா புகலக் கேண்மோ
 காந்துவான் மணிமௌலிக் கடவுளர்நே
           டருந்தணிகைக் கடவு ணெஞ்சின்
 ஆய்ந்தபோ தடுத்தலர்நீ ரளித்தனவேற்
           றிடர்துமிக்கு மருளான் மன்னோ.

(கு - ரை.) அளற்று மறுக - சேற்றில் சுழல. சிறுவரை - சிறுபொழுது, கேண்ம் - கேளும். மௌலி - முடி. நேடு - தேடு. ஆய்ந்தபோது - விரும்பிய போழ்து. ஏற்று - ஏற்றுக்கொண்டு. துமிக்கும் - அழிக்கும்.

மாந்தர்காள், விழுங்கி உமிழா அழற்று மறுகச் சிறுவரையின் வினைவிளைத்தீர் உய்யுமா புகலக் கேண்மோ கடவுள் நேடு தணிகைக் கடவுள் நெஞ்சின் ஆய்ந்தபோது அளித்தன ஏற்று அருளால் இடர்துமிக்கும் என இணைத்துப் பொருள் கொள்க. மன், ஓ : அசைநிலைகள்.

(62)

 மன்னியபே ரன்புளத்து வளர்தோறு
           மவன்கருணை வளரா நிற்குந்
 துன்னியதோ ரன்புளத்திற் றொலைதோறு
           மவன்கருணை தொலையா நிற்கு
 மின்னிலைமை தேர்ந்தவன்ற னருள்கிடைத்தோர்
           பெருவாழ்வு மெண்ணி யன்பாம்
 அன்னிலையே குறிக்கொண்மி னருட்டணிகைப்
           பெருமான்மெய் யருளிற் றாழ்ந்தே.

(கு - ரை.) மன்னிய - நிலைபெற்ற. துன்னிய - பொருந்திய. குறிக்கொண்மின் - குறியாகக் கொண்டு ஒழுகுங்கள். அருளிற் றாழ்ந்து - அருளைப் பெறவிரும்பி.

அன்பு வளர்தோறும் கருணை வளராநிற்கும்; அன்பு தொலைதோறும் கருணை தொலையா நிற்கும். இந்நிலைமை தேர்ந்து பெருவாழ்வும் எண்ணிப் பெருமான் அருளிற் றாழ்ந்து அன்பாம் அந்நிலையே குறிக்கொண்மின் என இயைத்துப் பொருள் கொள்க.

(63)