பக்கம் எண் :

1514தணிகைப் புராணம்

(கு - ரை.) கொடை யாதும் இலார் - ஈகை சிறிதும் இல்லாதவர். குறையுற்று - குறைவேண்டி, வேண்டிய பொருளைப் பெற விரும்பி. உயங்குறுவீர் - வருந்தும் உலகீர். அண்மினிர் உய்யுமின் - நெருங்கி அருள்பெற்று உய்யுங்கள்.

கொடை இலார்கள் தமைக் குறையுற்று ஏத்தி உயங்குறுவீர் கொடையால் உயரும் தணிகைக் குருவை அண்மினீர் உய்யுமின் என இணைத்துப் பொருள்
கொள்க.

முருகனை அடைந்தோர் பெருநல மடைவர் என்பது குறிப்பு.

(80)

வேறு

 மின்னேர் மருங்கு லிடைதுமிய
           விம்மி யெழுந்து புடைபரந்து
 பொன்னேர் சுணங்கு குடிகொண்ட
           புளகக் களபக் கனதனத்தீர்
 தன்னேர் தணிகை யழகனெறுழ்த்
           தடந்தோ டழுவப் பெற்றீரேல்
 இந்நாள் காறுங் கழிநாளும்
           பயனா ளாகு மியல்பீரே.

(கு - ரை.) மருங்குல் - இடை. இடைதுமிய - இடையே ஒடிய. சுணங்கு - தேமல். புளகம் - மகிழ்ச்சி. களபம் - கலவைச்சந்தனம். எறுழ் - வலிமை. பயன் நாள் ஆகும் - பயன் தரும் நாட்கள் ஆகும்.

மருங்குல் துமிய விம்மி எழுந்து பரந்து சுணங்கு குடிகொண்ட களபக் கனதனத்தீர், அழகன் தோள் தழுவப்பெற்றீரேல் இந்நாள்காறும் கழிநாளும் பயன்நாள் ஆகும் இயல்பீர் ஆவீர் என்க. ஆவீர் என்பது வருவித்துரைக்கப்பட்டது.

(81)

 பீர்பூத் தெழுந்த மணிமுலையும்
           பிடரிற் குலைந்து விழுங்குழலும்
 நீர்பூத் தெழுந்த வாட்கண்ணு
           நிறைமுற் றொழிந்த துயர்நெஞ்சும்
 வேர்பூத் தெழுந்த நுதலுமாய்
           மேவார் போல வினைநல்லோய்
 சீர்பூத் தெழுந்த தணிகைவரைச்
           செம்மால் கலவி சிந்தியே.

(கு - ரை.) பீர் - பசலை. பிடர் - புறங்கழுத்து. நிறை - உள்ளத்தின் உறுதி. வேர் - வியர்வு. நுதல் - நெற்றி. மேவார் - பகைவர். இனைதல் -
வருந்துதல்.