பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1515

முலையும், குழலும், கண்ணும், நெஞ்சும், நுதலுமாய் இனை நல்லோய் தணிகைவரைச் செம்மல் கலவி சிந்தி என முடித்துப் பொருள் கொள்க.

தணிகைவரை முருகனை நினைத்த அளவில் மனத்துயர் அகலும் என்பது குறிப்பு.

(82)

 சிந்தித் தறியே னரைக்கணமுந்
           தெரிசித் தறியே னொருகாலும்
 வந்தித் தறியேன் கனவினிலும்
           வழுத்தி யறியேன் மறந்தேனும்
 பந்தித் தடர்க்கு மலஞ்சவட்டிப்
           பரமானந்த மெனக்களித்தான்
 கந்தித் தலருங் காவிவரைக்
           கந்தன் கருணைக் கெதிருண்டோ.

(கு - ரை.) சிந்தித்து - நினைத்து. தரிசித்து - பார்த்து. வந்தித்து - வணங்கி. வழுத்தி - புகழ்ந்து. பந்தித்து - கட்டி. அடர்க்கும் - வருத்தும். சவட்டி - மிதித்து அழித்து. கந்தித்து - நறுமணத்தைப் பரப்பிக்கொண்டு. எதிர் - ஒப்பு.

சிந்தித்து அறியேன் தெரிசித்து அறியேன் வந்தித்து அறியேன் வழுத்தியறியேன் எனினும் அடர்க்கும் மலம் சவட்டிப் பரமானந்தம் எனக்கு அளித்தான் கந்தன் கருணைக்கு எதிர் உண்டோ என்க. எனினும் என்பது வருவிக்கப்பட்டது. "உண்டோ" - என்பதில் "ஓ" - எதிர்மறை.

(83)

 உண்டு வீடென் றோர்ச்சியுமற்
           றுலகின் முழுது மதுவது வாய்க்
 கண்டு கேட்டுண் டுயிர்த்துற்றுக்
           கலங்கிச் சுழலும் புலையேனை
 மண்டு தீர்த்தந் தலமூர்த்தி
           வடிவு மூன்று மாங்காங்குக்
 கொண்டு காவி வரைத்தணிகைக்
           குமர னாண்ட திறும்பூதே.

(கு - ரை.) ஓர்ச்சியும் - உணர்வும். அது அது ஆய் - அவ்வப் பொருளாய் (பல்வேறு பொருள்களாய்). கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று - முறையே கண், செவி, வாய், மூக்கு, மெய்களால் புலன்களை நுகர்ந்து. புலையேனை - கீழ்மகனாகிய என்னை. தீர்த்தம் தலம் மூர்த்தி வடிவு மூன்றும் கொண்டு - தீர்த்தமாகவும், தலமாகவும், மூர்த்தியாகவும் மூன்று வடிவம் கொண்டு. இறும்பூது - அற்புதமே ஆகும்.