பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1517

 இடிக்குந் துணையா யகம்புறமென்
           றெங்குந் தானா யுடனிற்கும்
 கடிக்குங் குமவார் பொழிற்றணிகைக்
           கடவுட் களைகட் டிறனோரில்
 துடிக்கும் படர்நோய்ப் பாவவினை
           தோன்றா வண்ணங் காவதனான்
 முடிக்குந் திறமா ருயிர்சற்று
           முன்னா முன்னா வந்தோவே.

(கு - ரை.) இடிக்கும் துணையாய் - தவறு கண்டுழித்திருத்தி நல்வழிப்படுத்தும் தோழனாய். அகம் புறம் - உள்ளும் வெளியும். கடி - நறுமணம். களைகண் - பற்றுக்கோடு. கா அதனால் - காத்துவருவதனால். "கா" முதனிலைத்தொழிற்பெயர். ஆருயிர் முடிக்கும் திறம் சற்றும் முன்னா - அடியார்களின் அரிய உயிர் மரணத்தை ஒருபோதும் அடையா, (அதனால்) அந்தோ முன்னா - அவர்கள் இறுதி குறித்து அந்தோ என்னும் இரக்கச் சொல்லும் தோன்றா.

'அந்தோ' என்பது ஒரு சொல்லே எனினும், கூறற்கு உரியார் பலராதலின் பன்மை முடிபு கொண்டது.

(87)

 அந்தோ வேழச் சிலைவணக்கி
           யலர்க்கோ றொடுக்கு மதன்போரால்
 வெந்தோ வெனநெஞ் சழிந்தந்த
           வெப்ப முழுது மந்நிலையே
 பந்தோ வெனும்பூண் முலையாரிற்
           பாற்ற முயங்கி வளர்க்கின்றீர்
 வந்தோ மெனுஞ்சொற் பொருட்டணிகை
           மன்னைக் கலந்து மாற்றீரே.

(கு - ரை.) வேழச்சிலை - கரும்புவில். அலர்க்கோல் - மலரம்பு. மதன் - மன்மதன். வெந்து ஓ என நெஞ்சு அழிந்து - வெதும்பி உள்ளங் கலங்கி ஓ என இரங்கி, அந்நிலையே - அப்பொழுதே. பாற்ற முயங்கி வளர்க்கின்றீர் - ஒழிக்கக் கருதிப் புணர்ந்து அதனை மேலும் மேலும் வளர்த்துக் கொள்கின்றீர். ஓம் எனும் சொற் பொருள் - ஓம் என்னும் பிரணவத்தின் பொருளாகவுள்ள. தணிகை மன்னைக் கலந்து மாற்றீர் - தணிகையின் தலைவனாகிய முருகனைக் கலந்து அவ்வெப்பத்தைப் போக்கிக் கொள்வீர்களாக.

சிலை வணக்கிக் கோல்தொடுக்கும் மதன் போரால் வெந்து அழிந்து வெப்ப முழுதும் அந்நிலையே முலையாரிற் பாற்ற முயங்கி வளர்க்கின்றீர் ஓம் எனும் சொற் பொருள் மன்னைக் கலந்து மாற்றீர் என முடித்துப் பொருள் கொள்க.