பக்கம் எண் :

1518தணிகைப் புராணம்

மகளிர் முயக்கம் காமத்தை மேலும் மேலும் வளர்க்குமே யன்றித் தணிக்காது என்பதும் அதனை மாற்றவல்லது முருகன் அருளே என்பதும் இதனால்
கூறப்பட்டன.

(88)

 மாற்றீர் காமப் பெருவிழைவை
           வளரீ ரிறைவ னிடத்தன்பைப்
 பாற்றீர் நெறியற் றவரிணக்கம்
           பற்றீ ரடியார் நல்லிணக்கம்
 கூற்றீர் நுமக்கு நீரானாற்
           குற்ற மொழிப்பான் றுயர்ப்படுத்தும்
 தேற்றீஞ் சோலைத் தணிகைவரைச்
           செம்ம றனைநொந் திடலாமே.

(கு - ரை.) காமப் பெருவிழைவை - காமத்தில் கொண்டுள்ள பெரு விருப்பை. நெறியற்றவர் - கீழோர். இணக்கம் - நட்பு. கூற்றீர் - எமன். துயர்ப்படுத்தும் - துன்பத்தைச் செய்யும். செம்மல் - தலைவன்.

விழைவை மாற்றீர், அன்பை வளரீர், நெறியற்றவர் இணக்கம் பாற்றீர், அடியார் நல்லிணக்கம் பற்றீர், நுமக்கு நீர் கூற்றீர் ஆனால் குற்றம் ஒழிப்பான் துயர்ப்படுத்தும் செம்மல் தனை நொந்திடல் ஆமே என்க. "நேர்ந்திடல் ஆமே" - என்ற பாடம் பொருந்தாமை காண்க.

'கூற்றீர்' பன்மை இழிவுகுறித்து நின்றது.

(89)

 ஆமே நமதா ருயிர்த்துணையென்
           றமலன் றணிகை யெம்பெருமான்
 தேமே வனசத் திருப்பாதஞ்
           சேமித் துளத்துப் போற்றிலீர்
 நாமே லவன்மெய்த் திருப்புகழை
           நாட்டீர் நாட்டீ ரெவ்வாறு
 போமே சறவு படவுலகப்
           பொருண்மேல் விளைந்த பெரும்போத்தே.

(கு - ரை.) ஏசறவுபட - துன்பம் உண்டாவதற்குக் காரணமாக, பழிச்சொல் உண்டாகுமாறு. பெரும் போத்து - உள்ளத்தில் உள்ள அவா, வெகுளி, அறியாமையென்னும் பெருங்குற்றங்கள்.

நமது ஆருயிர்த்துணை ஆம் என்று எம்பெருமான் திருப்பாதம் உளத்துச் சேமித்துப் போற்றீர், நாமேல் அவன் புகழை நாட்டீர் நாட்டீர் ஏசறவுபட விளைந்த பெரும் போத்து எவ்வாறு போம் என இணைத்துப் பொருள் கொள்க.