பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1519

நாட்டீர் நாட்டீர் என்னும் அடுக்கு நாட்டுதல் இன்றியமையாதது என்பதை விளக்கி நின்றது.          

(90)

வேறு

 போத்தனுக்கி யானந்தப் புணரியிற்றோய் வதுகருத்தேல்
 நாத்திகமாம் பரமதத்து நவைமொழியா றொழுகுவீர்
 ஆத்தனருட் டணிகைவரை யண்ணலரு ளானவின்ற
 மூத்தமறை வழியருளே முன்னாக முன்னீரே.

(கு - ரை.) அனுக்கி - கெடுத்து. ஆனந்தப்புணரி - பேரின்பக்கடல். நாத்திகம் - சூனிய வாதம், (கடவுளும், நல்வினை தீ வினைகளும், இனிவரும் பிறப்புக்களும் இல்லை என்று கூறுவது). நவை - தீயன. ஆத்தன் - கடவுள். நவின்ற - கூறியருளிய. மூத்த மறை வழி - பழமையான மறையின் நெறி. அருளே முன்னாக - அருளைப் பெறுவதே கருத்தாக. முன்னீர் - வழுவாது செல்வீர்களாக.

அனுக்கித் தோய்வது கருத்தேல் நவை மொழி ஆறு ஒழுகுவீர் (அதனை விடுத்து) அண்ணல் நவின்ற மறைவழி அருளே முன்னாக முன்னீர் என்க.

(91)

 முந்நீரிற் புனலன்றி முகில்சொரியா வாறேபோல்
 நன்னீர்மைப் பொருளெல்லா நயப்பவருக் கருட்குருவாய்த்
 தன்னீர்மைப் பதத்தழுத்திச் சதுமறையா கமத்தன்றிக்
 கொன்னீர்மைத் தணிகைவரைக் கொற்றவன்மற் றருளானே.

(கு - ரை.) முந்நீர் - கடல். புனல் - நீர். முகில் - மேகம். நீர்மை - தன்மை. நயப்பவர் - விரும்புவோர். பதத்து - திருவடியில். ஆகமம் - அறிவு நூல்.

'முந்நீரின் புனலன்றி முகில் சொரியா வாறேபோல்' என்பது உவமை.

'நன்னீர்மைப் பொருள் எல்லாம் நயப்பவருக்குச் சதுமறை ஆகமத்தன்றித் தணிகைவரைக் கொற்றவன் அருளான்' என்பது பொருள்.

முந்நீரின் புனலன்றி முகில் சொரியா ; சதுமறை ஆகமத்து நன்னீர்மைப் பொருள் அன்றித் தணிகைவரைக் கொற்றவன் நயப்பவருக்கு அருளான் என்க.

(92)

 அருளாழி தணிகைவரை யறக்கடவுள் கருணையால்
 உருவாகி யருளானே லுயர்மறையு மறையொழுக்கும்
 திருவாரு மைந்தொழிலுந் தீக்கையுமற் றெவைகளுமற்
 றிருளாகி யெவ்வுயிரு மிடர்க்கடனின் றேறாவே.