பக்கம் எண் :

164தணிகைப் புராணம்

(வி - ம்.) ஏய்த்து - இணைத்து. உள்ளிருள் - ஆணவம்.

 கற்ப கங்கடவு ளானி தித்துணை கதிர்த்த மாமணி யடுத்தலும்
 ஒற்க மிக்கவன்ம கிழ்ந்தெ திர்ந்தென வுயர்ந்த நைமிச வனத்திடை
 அற்கு மாதவர்கள் யாவ ருத்தலை யடுத்த சூதமுனி வரவுகண்
 டுற்ப வப்பய னடுத்து ளாமென வுவந்து வல்லையெதிர் கொண்டனர்.

(இ - ள்.) கற்பக விருக்கங்களும், தெய்வத்தன்மை பொருந்திய காமதேனுவும், சங்கநிதியும், பதுமநிதியும், விளங்கிய பெருமை பொருந்திய சிந்தாமணி முதலிய பொருள்களும் அடுக்கத் தரித்திரமிகுந்தவன் உவந்து எதிர்கொண்டாற்போல உயர்ச்சி பொருந்திய நைமிசவனத்தின்கண் தங்குமாதவர்கள் யாவரும், அவ்விடத்துப் பொருந்திய சூத்முனிவர் வருகையை யறிந்து பிறவியெடுத்ததனா லுண்டாகிய பயனையடுத்துள்ளோமென்று மகிழ்ந்து விரைவாக எதிர்கொண்டனர்.

(வி - ம்.) ஒற்கம் - வறுமை; "இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை" எனவருந் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. எதிர்ந்தென - எதிர்ந்தாற்போல. நிதித்துணை - சங்கநிதி, பதுமநிதி. தலை - அத்தலை; அவ்விடம். உற்பவம் - பிறப்பு.

(15)

 ஆத னத்திடையி ருத்தி நூன்முறை யருச்ச னைத்தொழினி ரப்புபு
 வேத மாகமம் விளங்க வோதிய விதிக்கி லக்கியமெ னப்படும்
 ஏத நீவுபதி னெண்பு ராணமு மெனைத்து மோர்ந்துபொரு டெள்ளிய
 சூத மாதவ வெனப்பு கழ்ந்துவகை துள்ள மெல்லவுரை யாடுவார்.

(இ - ள்.) (எதிர்கொண்ட காலத்து) ஆதனத்தின்கண் ணெழுந்தருளச்செய்து நூல்களிற் கூறிய முறைப்படி அருச்சனைத் தொழிலை முற்றுறச் செய்து வேதாகமங்கள் யாவரும் விளங்கும் வண்ணம் கூறப்பட்ட விதிகளாகிய இலக்கணங்கட்கு இலக்கியமென்று சொல்லப்படுகின்ற துன்பத்தை நீக்கும் பதினெண்புராணங்களையும், ஏனைய நூல்களையு மாராய்ந்து பொருள் தெளிந்தெடுத்த பெரிய தவத்தினையுடைய சூதமா முனிவரே யென்று புகழ்ந்து மகிழ்வு பொங்க மெல்ல விண்ணப்பஞ் செய்யத் தொடங்குவார்கள்.

(வி - ம்.) ஏதம்நீவு - துன்பத்தைத் துடைக்கின்ற. உரை ஆடுவார் - சொல்வார்.

(16)

 வாய்ந்த மூவறுபு ராண முன்பிவண் வகுத்து ரைத்தனைய வற்றினுள்
 ஏய்ந்து மேதக விளங்கு காந்தம திணங்கு சங்கிதையொ ராறனுள்
 ஆய்ந்து சங்கரர் பெயர்ப்பு ணர்த்தவ தனுட்சி றந்திடுபின் கூற்றினிற்
 காய்ந்து டற்றுகதிர் வேற்ப டைக்குரிசில் காம ருந்தணிகை மான்மியம்.

(இ - ள்.) பொருந்திய பதினெண் புராணங்களையும், முன்னர் இவ்விடத்து வகுத்துச் சொல்லினை. அப்புராணங்களுள் (பொருணலங்கள்) பொருந்தி மேன்மையுற விளங்குகின்ற காந்தமென்னும் நூலின்கட் பொருந்திய ஆறு சங்கிதையினுள் (பெரியோர்கள்) ஆராய்ச்சி செய்து சங்கரர் பெயரைப் புணர்த்துக் கூறிய சங்கர சங்கிதையிற் சிறப்புப்