பக்கம் எண் :

182தணிகைப் புராணம்

துன்பத்தினை நீக்கி அருளினை யளிக்கின்ற சிலாவட்டமும், குற்றமில்லாத கந்தருவவனமும், முழக்கி வண்டுகள் மொய்க்கின்ற மலர்களோடுகூடிய சுனைகள் நெருங்கிய கேதாரமும், தேனைத் துளிக்கின்ற தோட்டக் கூற்றினையுடைத்தாகிய காமிகாரணியமும் வடக்கேயுள்ள உத்தாலகமென்னு மிடமும்.

(வி - ம்.) தெழித்து-முழங்கி. வெறுத்த - செறிந்த. படப்பை-மருதநிலத் தோட்டக்கூறு.

(41)

 கடவுளர் முதலோர் வணங்குசீ கோட்டங் காதரந் தபுங்குரு குல்லியம்
 சுடர்மணி யிமைக்குங் கங்கைசூழ் காசி தொல்வினை யறுங்கபி லேசம்
 மடவிய ராட லறாதமா காளம் வான்படர் புகழ்விரூ பாக்கம்
 தொடலைவன் மாயை விடைகொள்வன் மீகம் துலங்கிய தேசநீ வனமே.

(இ - ள்.) தேவர்கள் முதலியோர்கள் வணக்கம் செய்கின்ற ஸ்ரீகோட்டமும் துன்பத்தை நீக்குகின்ற குருகுல்லியமென்னும் வைப்பும், ஒளியோடுகூடிய முத்துக்க ளொளிர்கின்ற கங்கையாற்றினாற் சூழப்பட்ட காசியம்பதியும், பழவினை யறுதற்கேதுவாய கபிலேசமென்னும் வைப்பும், இளமைப் பருவத்தோடுகூடிய பெண்கள் நடனம் நீங்காத திருமாகாளமும், வான்சிறிதாகப் போர்க்கும் புகழினையுடைய விரூபாக்கமென்னும் வைப்பும், கூட்டமாகிய வலிய மாயைகள் விடை கொள்ளுதற் கேதுவாகிய திருவாரூரும், திருவீழிமிழலையும்.

(வி - ம்.) காதரம் - துன்பம். "தேங்கிய காதர ஆதரம் செப்பி" என்னும் தஞ்சை வாணன் கோவையானறிக. தொடலை - கூட்டம். வன்மீகம் - திருவாரூர். தேசினிவனம் - வீழிமிழலை.

(42)

 திங்கள்சேர் மாடக் கீர்த்திவா சேசம் கங்கையா தாரசித் தியமே
 துங்கமா தவர்தாழ் மந்தன காளம் துகளின்மா யாபுர மிபங்கள்
 சிங்கநின் றுலம்ப வெருவுசீ சயிலம் தெகிழ்ந்தபூந் தண்டகா ரணியம்
 பொங்குநீர்வைகை யாலவாய் பொருந்தம் பொருகரை யமர்புடைமருதூர்.

(இ - ள்.) சந்திரன் பொருந்துகின்ற இல்வரிசைகளை யுடைய கீர்த்திவாசேச மென்னும் வைப்பும், கங்கையாதாரசித்திய மென்னும் வைப்பும், உயர்வு பொருந்திய மாதவர்கள் வணங்குகின்ற மந்தனகாள மெனும் வைப்பும், குற்றமில்லாத மாயாபுரியும், யானைகள் கெடும்படி சிங்கங்கள் நின்று பிளிறுகின்ற ஸ்ரீ பருப்பதமும், மலர்ந்த பூக்களையுடைய தண்டகாரணியமும், மிகுந்த நீரோடுகூடிய வையை நதியாற் சூழப்பட்ட மதுரையும், தாம்பிரவர்ணியின் கரையிலுள்ள திருப்புடை மருதூரும்.

(வி - ம்.) தெகிழ்ந்த - வாய்விண்ட; "தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும்" எனவரும் (கேமசரி, 29) சந்தாமணியானுணர்க.

(43)

 காவிரி வளத்த வுசிரமே தென்பாற் கவின்றவுத் தாலக நகரம்
 பூவிரி பொதும்பர் மலயவெற் படுத்தோர் போக்கரு விக்கிர மேசம்