பக்கம் எண் :

புராண வரலாற்றுப் படலம்189

வன்) சங்கரிக்கின்ற கற்ப முடிவிலும் அழியாதிருத்தலின் கற்பசித்தாம். அமர்தணிதலினாலே தணிகையாம்.

(வி - ம்.) மூலம் - காரணம். காவியத்திரி - காத்திரி என விகாரமாயிற்று. அத்திரி - மலை. சித்து-அழிவில்லாதது. ஒரு காவிக்கொடி மூன்று காவி மலரைப் பூக்கின்ற தென்க.

(59)

 பிரணவப் பொருளை யுணர்த்தலிற் பிரண
           வார்த்தமா நகரமிந் திரற்கும்
 வரமளித் திடலா லிந்திர நகரி
           மகதியாழ் முனிக்குறு பிரியம்
 விரவிய சிறப்பா னாரதப் பிரியம்
           வீட்டினை யகோரனென் றுரைக்கும்
 அரிறபு தவத்தோற் குய்த்தளித் திடலா
           லகோரகை வல்லியப் பிரதம்.

(இ - ள்.) பிரணவமென்னும் மந்திரத்தின் பொருளை (இறைவனுக்கு) உணர்த்தினமையாலே பிரணவார்த்த மாநகரமாகும். இந்திரனுக்கு வேண்டிய வரங்களை யளித்தலினாலே இந்திர நகரியாம். மகதியென்னும் யாழினையுடைய நாரதமுனிவனுக்கு மிக்க பிரியங்கலந்த சிறப்பினாலே நாரதப் பிரியமென்னும் பெயரையுடையதாம். வீடுபெற்றினை அகோரனென்று சொல்லப்படும் குற்றம் நீங்கியோனுக்குக் கொடுத்துக் காத்தலின் அகோர கைவல்லியப் பிரதமென்னும் பெயரினையுடையதாம்.

(வி - ம்.) அரில் - குற்றம். அகோரன் - ஒரு முனிவன்.

(60)

 இறுதியிற் கிளந்த விந்தநாற் பெயரு
           மீண்டிய முதலுக நான்கும்
 முறைமையி னொவ்வொன் றுரிமையி னெடுத்து
           மொழிந்திடப் படுமெந்த வுகத்தும்
 மறுமுத றுமிக்கும் வளங்கெழு சீபூ
           ரணப்பெயர் வழங்கிடப் படுமால்
 அறிமினோ குறிக ளத்திருக் குன்றத்
           தினுக்கடை யாளமுங் கேண்மின்.

(இ - ள்.) இறுதியிற் கூறிய இந்நான்கு பெயரும் பொருந்திய முதலுக முதலிய நான்கு யுகங்களுக்கும் முறைமையினொவ்வொன்று உரிமையோடு வழங்கப்படும். எந்த வுகத்தினும் குற்றத்திற்குரிய காரணங்களைக் கெடுக்குஞ் சீபூரணப் பெயர் வழங்கப்படும். இத்திருமலைக்குரிய பெயர்களை அறிமின்கள். அத்திருமலைக்குரிய அடையாளமுஞ் சொல்லக் கேண்மின்கள்.

(வி - ம்.) மறு - குற்றம். முதல் - காரணம். குறி - பெயர்.

(61)