பக்கம் எண் :

246தணிகைப் புராணம்

தன்மையை (நூன்மறையானும், அனுபவத்தானும்) ஆராய்ந்து கோபித்து உள்ளத்தின்கண் வயிரங் கொள்ளார்கள்.

(வி - ம்.) இழைப்ப - இழைப்பார்கள். சிறுமையினீங்கினோர் - பெரியோர்.

(104)

 பேதைமைப் பாலி னாதல் பெருங்கிழ மையினா னாதல்
 மேதக நட்டோர் மாட்டும் விரவிடும் பிழைக ளெல்லாம்
 காதுதற் பால வல்ல காதிடிற் கண்ணி னோடி
 நோதக வோச்சி மெல்ல நோன்றவே யெறிகு வாரால்.

(இ - ள்.) அறியாமைப் பகுதியினானாதல், பெரிய நட்பினுரிமையி னானாதல், மேன்மைபொருந்த நட்பினரிடத்துப் பொருந்தும் குற்றங்க ளெல்லாம் ஒறுக்குந் தரமுடையனவல்ல. அவற்றினுக்கொறுக்க வேண்டின் கண்ணோட்டஞ் செய்து வருந்தத்தக்கதாக ஓங்கி மெல்லப் பொறுக்கும் வண்ணம் அடித்தலைச் செய்வார்.

(வி - ம்.) காதுதற் பாலவல்ல - ஒறுக்கும் பகுதியுடையவல்ல, காதிடின் - தண்டிக்கப்புகின். கண்ணினோடி - கண்ணோட்டஞ்செய்து. நோதக - வருந்த. ஓச்சி - ஓங்கி. நோன்ற - பொறுக்க. "பேதைமை யொன்றோ" எனுந் திருக்குறளின் கருத்தும். "கடிதோச்சி மெல்ல எறிக" என்னும் திருக்குறளின் கருத்தும் "மண்ணோடியைந்த" என்னும் திருக்குறளின் கருத்தும் இச்செய்யுளி னமைந்திருத்தல் காண்க.

(105)

 பூவணைக் கிழவன் சான்ற புலனகத் தின்மை யாலே
 யோவிய வணக்கத் தோடு மொய்யென நம்பா லுற்றான்
 மேவிய பிழையு மொன்றே விளித்தனை யுணர்த்திப் பின்னும்
 தாவிய வணக்க மன்றே தன்னமே பெரிதாக் கொண்டு.

(இ - ள்.) தாமரைமலராசனத்தை யுரிமையாகவுடைய பிரமன் உயர்ந்த அறிவு தன்னகத்தில்லாமையானே வணக்கமில்லாமையோடு நம் பக்கலுற்றனன் (அவன் பக்கலிற்) பொருந்திய பிழையுமொன்றேயாம். அதனை அவனையழைத் துணர்த்தினாய் பின்னரும் ஒழிந்த வணக்கஞ் சிறிதை நீ பெரிதாகக்கொண்டு.

(வி - ம்.) சான்ற புலன் - உயர்ந்த அறிவு. ஓவிய வணக்கம் - ஒழிந்த வணக்கம்; வணக்கமின்மை. விளித்தல் - அழித்தல். தாவிய வணக்கம் - ஒழிந்த வணக்கம். தன்னம் - சிறிது. உணர்த்தி - உணர்த்தினாய்.

(106)

 துண்டமும் வாயுங் காதுந் துணைக்கணுஞ் சோரி தூங்க
 அண்டமும் பொடிக்கு மாற்ற லருங்கணம் புடைப்ப வேவிக்
 கண்டக நிரைத்தா லன்ன கடும்பர னிரந்த கோட்டம்
 முண்டகத் தவனைப் பன்னாண் முழுத்துய ருழப்ப வைத்தி.

(இ - ள்.) மூக்கும், வாயும், காதும், இரண்டாகிய கண்களுமாகிய இவற்றின்கண் இரத்தந் தங்க அண்டங்களையும் பொடியாகத்தக்க