பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்251

(வி - ம்.) தா - கெடுதல். தத்துவம் - உண்மை. தழங்கல் - முழங்கல்.

(118)

வேறு

 சாருமெவ் வுயிருந் தன்வய மாக்கித்
           தளர்க்குமா ணவப்பகை யோடும்
 சூரனை முதலாந் துளக்கரும் பகையுந்
           துலங்குமிப் பிரணவப் பொருளாம்
 வீரனி லின்றே விளிந்ததென் றுளத்து
           விரைந்தெழும் வீரத்தின் குறிப்பின்
 ஆரமர் முடியோ னார்த்தலி னாய
           தவ்விடம் வீராட்ட காசம்.

(இ - ள்.) தான் கலந்த எவ்வகைப்பட்ட ஆன்மாக்களையும் தன் வசமாகச்செய்து வருத்தும் ஆணவமலமாகிய பகையோடு சூரனை முதலாகவுடைய அசைவிலாத பகையும் விளங்குகின்ற பிரணவ வடிவமாகிய வீரனால் இக்கணமே கெட்டதென்று உள்ளத்தின்கண் விரைவாக எழுகின்ற வீரத்தின் குறிப்பால் ஆத்திமாலை தங்கப்பெற்ற முடியையுடைய சிவபெருமான் முழக்கம் செய்தலினாலே அவ்விடம் வீராட்டகாச மெனப் பெயராயது.

(வி - ம்.) தளர்க்கும் - தளரச்செய்யும். இல் . ஐந்தாவதேதுப் பொருள். ஆர் - ஆத்தி.

(119)

 மரணமும் பிறப்புங் கடந்தபே ரின்பம்
           வழங்குமப் பெரும்பெய ரிறைக்குப்
 பிரணவப் பொருளைக் கொடுத்தகா ரணத்தாற்
           பிரணவ வருத்தநன் னகராம்
 இரணவல் லவுணக் கிளையெலா முருக்க
           விலங்கருட் டிருவுருத் தாங்கி
 அரணமா யமரர்ப் புரப்பவ னென்று
           மமர்ந்தரு டணிகைமா நகரம்.

(இ - ள்.) போரின்கண் வலிய அவுணக் கூட்டங்களையெல்லாம் கெடுக்க விளங்குகின்ற அருளையே திருவுருவமாகக் கொண்டு பற்றுக்கோடாய் நின்று தேவர்களைக் காப்பவனாகிய குமரநாயகன் எழுந்தருளியிருக்கின்ற தணிகையம்பதியானது, பிறப்பிறப்பினை நீங்கிய பேரின்பத்தினைக் கொடுக்கும் பெரும் பெயராகிய பஞ்சாக்கர வடிவமாகிய முதல்வனுக்குப் பிரணவ மந்திரத்தின் பொருளைச் செவியறிவுறுத்த காரணத்தினாலே பிரணவவருத்த நகரென்னும் பெயரினையுடையதாகும்.

(வி - ம்.) பெரும் பெயர் - பஞ்சாக்கரம். இதனைப் "பெரும் பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந்து" என்னும் சிவஞான போதப் பாயிரச் செய்யுளடியா னுணர்க. பெரும்பெயர் - மகாவாக்கிய மெனினுமாம்.