பக்கம் எண் :

252தணிகைப் புராணம்

அது - தத்துவமசி. இரணம் - போர். முருக்க - கெடுக்க. அரணம் -
பற்றுக்கோடு.

(120)

 பணிகிள ராரம் பண்ணவன் முருகற்
           படர்ந்தருந் தவத்தினை யாங்குக்
 கணிகமே புரிந்து கருத்துமுற் றுறலாற்
           கணிகவெற் பெனப்பெயர் விளங்கும்
 துணிகதி ரிமைக்கு நவமணி யடுக்கஞ்
           சூழ்ந்தவச் சிலம்புமற் றின்றும்
 அணிகிளர் தவங்க ளாதியோர் கணிக
           மாற்றினு மரும்பய னடைவார்.

(இ - ள்.) படம் விளங்குகின்ற பாம்பினை மாலையாகக் கொண்ட சிவபெருமான் முருகனைத் தியானித்து அரிய தவத்தினை அவ்விடத்து ஒருகணம் செய்து தான் கருதிய எண்ணமெல்லாம் முற்றுப்பெறலால் கணிக வெற்பெனும் பெயரினோடு விளங்கும். தெளிந்த கிரணங்கள் ஒளியை வீசுகின்ற ஒன்பான் வகையாகிய மணிச்சிறு குன்றுகள் சூழ்ந்த அத்தணிகை மலையின்கண் இன்றும் அழகு விளங்குகின்ற தவ முதலிய புண்ணிய காரியங்களை ஒருகணப்பொழுது செய்யினும் செய்தவர்கள் பெறுதற்கரும் பெரும்பயனை யடைவார்கள்.

(121)

 மூலமீ றிகந்து மூலமே லில்லா
           மூலகா ரணப்பொரு டனக்கு
 மூலமா யிருந்து நால்வகைப் பொருட்கு
           மூலமா கியவரு மறையின்
 மூலவான் மொழிக்குப் பொருட்செறி வெவர்க்கு
           மூலமா னவன்விரித் தமையான்
 மூலவே தண்ட மெனப்படுங் குறவர்
           மூலந்தே ரருவரைப் பறம்பு.

(இ - ள்.) தோற்றமு மிறுதியும் நீங்கித் தனக்கு மேலான மூலப் பொருளில்லாத மூலகாரணப் பொருளாங் கடவுட்கு முதலாயிருந்து அறம்பொருளின்பம் வீடென்னும் நால்வகைப் பொருட்குங் காரணமாகிய அரிய வேதத்தின் முதலிலுள்ள மகாமந்திரத்தின்கண்ணுள்ள பொருட் செறிவை எல்லாத் தேவர்களுக்கு முதலானவனாகிய குமரப் பெருமான் திருவாய் மலர்ந்தருளினமையான் மூலமலை யென்று சொல்லப்படும். குறவர்கள் கிழங்கை யாராய்ந்தெடுக்கின்ற அரிய மூங்கில்களையுடைய அத்தணிகைமலை.

(வி - ம்.) மூலமென்பதற்கு - முதல், காரணம், கிழங்கு எனப் பொருள் கொள்க. வான் - பெரிய. வரை - மூங்கில். பறம்பு - மலை.

(122)