பக்கம் எண் :

254தணிகைப் புராணம்

பொலிவுகண்டு" என்றார். முதுமை - ஈண்டுப் பேரறிவின்மேற்று. சாமி - முதல்வன்; ஈண்டிறைவனை யுணர்த்திற்று.

(124)

 ஆர்த்துநின் றாடும் வீராட்ட காசத்
           தடிகள்பின் பாருயிர் புரப்பான்
 சீர்த்தமெய் யுருவே சிவலிங்க வுருவாய்த்
           திகழவீற் றிருந்தனன் மாதோ
 வார்த்தசெஞ் சடைதாழ் திருவடை யாளம்
           வயங்குமச் சிவலிங்க வடிவைப்
 பார்த்தவர் பணிந்தோர் பழிச்சின ரெய்தும்
           பயனெவர் பகர்தரற் பாலார்.

(இ - ள்.) முழங்கிநின் றாடுதலைச் செய்யும் வீராட்டகாசத்தின் கண்ணுள்ள சுவாமி பின்னர் அரியவுயிர்களைப் புரக்கும் பொருட்டுச் சிறப்புப் பொருந்திய உண்மையாய திருவுருவமே சிவலிங்க வடிவமாகி விளங்க வேறொருவர்க்கில்லாத சிறப்புடன் எழுந்தருளியிருந்தனன். நீண்ட செவ்விய சடைகள் தொங்குகின்ற அழகிய அறிகுறி விளங்கும் இச்சிவலிங்க வடிவத்தினைத் தரிசித்தவர், வணங்கினவர், துதித்தவராகிய இவர்களடையும் பயனை யாவர் சொல்ல வல்லவராவர்.

(வி - ம்.) வீராட்டகாசத்தடிகள் - சிவபெருமான். வார்த்த - நீண்ட : விகாரம்.

(125)

 அத்தகு வரைப்பின் வீராட்ட காசத்
           தடிகளா சான்வழி பாட்டிற்
 கொத்தநற் றீர்த்த மகழ்ந்துவார் சடிலத்
           தொண்புனல் பாய்த்தினர் நிறைத்து
 வைத்தன ரதனாற் சிவகங்கை நாமம்
           வழங்குமத் திருத்தநீர் படிந்தோர்
 பொத்துநோய் தீரா தனவெலாந் தீர்ந்து
           போகமும் வீடுமெய் துவரால்.

(இ - ள்.) மேற்கூறிய அத்தகுதியினையுடைய தணிகையின்கண் வீராட்டகாசத்தின் கண்ணுள்ள சுவாமிகள் பரமாசாரியன்பால் வழிபாடு செய்தற்குப் பொருத்தமான நல்லதீர்த்த மொன்றினை யுண்டாக்கி நீண்ட சடையின்கண்ணுள்ள ஒளிபொருந்திய கங்கை நீரினைப் பாய்ச்சி நிறையச் செய்துவைத்தனர். ஆதலான் அத்தீர்த்தம் சிவகங்கை யென்னுந் திருப்பெயரைப் பொருந்தும். அச் சிவகங்கையின்கண் மூழ்கினோர் குற்றம் பொருந்திய பிணிகள் நீங்காதனவெல்லாம் நீங்கப் பெற்று இம்மையிற் போகமும் வறுமையில் வீட்டினையு மடைவார்கள்.

(வி - ம்.) தீர்த்தமென்பது திருத்தமென நின்றது. பொத்து - குற்றம். பொத்து நோய் : வினைத்தொகையுமாம்.

(126)