பக்கம் எண் :

272தணிகைப் புராணம்

 கம்பமறப் படிந்தாடிக் குமாரலிங்கந் தொழுவோர்கள் கரிசி னீங்கி
 உம்பருக்கு மறிவரிய சிவலோகத் தெஞ்ஞான்று முறுவர் மாதோ.

(இ - ள்.) மாசிமதியின்கண்ணே வருகின்ற மகநாளில் குமாரக் கடவுள் இனிதாக மூழ்கிச் சிவபெருமானுக் கபிடேகஞ் செய்கின்ற வாசனையை, வெளியிடுகின்ற பூக்கணிறைந்த கயிலாய கங்கையினிடத்து அம்மாசிமதியின் கண் வருகின்ற மகநாளிற் சென்று நடுக்க மறப் படிந்து மூழ்கிக் குமாரலிங்கத்தினை வணங்குவோர்கள் மலக்குற்றங்களினின்று நீங்கித் தேவர்கட்கும் அறிதற்கருமையாகிய சிவலோகத்தில் எக்காலத்தும் பொருந்துவோராவர்.

(வி - ம்.) கும்பமதி - மாசிமாதம். மகநாள் - மகநட்சத்திரம். கம்பம் - நடுக்கம். கரிசு - குற்றம்.

(43)

 எத்தினத்தா யினுமொருகான் முழுகினரெப் பிணியுமெழு காத மோப்பிப்
 புத்தியறி வாயுள்சுசி புகழ்சூழ்ச்சி வீரம்வலி பொருண்மேம் பாடு
 மித்திரர்புத் திரர்மனைவி முதலான வெறுக்கையெலா மேவி யீற்றில்
 கொத்தினொடுங் கந்தலோ கத்தையவ னுருக்கொண்டு குறுகி வாழ்வார்.

(இ - ள்.) எந்நாளிலாயினு மொருதரம் (அத்தீர்த்தத்தில்) முழுகினவர்கள் எவ்வகை நோய்களையும் ஏழுகாத தூரமோட்டிப் போகமும், அறிவும், ஆயுளும், சுத்தமும், புகழும், விசாரமும், வீரமும், வலியும், பொருளான் மேம்பாடுறுதலும், சிநேகரும், மகாரும், மனைவியு முதலாகிய செல்வங்களையெல்லா மிம்பரிலெய்தி முடிவிற் றம்சுற்றத்தா ரொடுங் கந்தலோகத்தினை யவன் சாரூபம் பெற்று
அடைவார்கள்.

(வி - ம்.) புத்தி - போகம். சூழ்ச்சி - ஆராய்ச்சி. சுசி - சுத்தம். மித்திரர் - சிநேகர். வெறுக்கை - செல்வம்.

(44)

 செங்கமல மலரேய்க்கு மொருதிருக்கை
           குறங்கமைத்துச் செம்பொன் மேருத்
 துங்கவரிச் சிலைக்கடவு ளருண்ஞான
           சத்தியொரு தொடிக்கை யேந்திப்
 பொங்குமருட் கருணைவிழிக் கடையொழுக
           மலர்ந்தமுகப் பொலிவி னோடும்
 அங்கணமர் ஞானசத்தி தரனையகத்
           துறநினைப்போ ரவனே யாவர்.

(இ - ள்.) செந்தாமரைமலரை நிகர்க்கும் ஒரு திருக்கையைத் துடையின்மேற் றங்கச்செய்து செம்பொன் வடிவமாகிய மேருமலை யாகிய உயர்ந்த வில்லையுடைய சிவபெருமானருளிய ஞானசத்தியாகிய வேற்படையினை ஒரு வீரவளையினை யணிந்த திருக்கையிலேந்தி மிகுந்த அருளாலுளதாகுங் கருணை திருக்கடைக்கண் வழி யொழுகாநிற்க விரிந்த திருமுக மண்டலப் பொலிவினோடும் அவ்விடத்தே யெழுந் தருளியிருக்கின்ற வேற்படையைத் தரித்த முருகக்கடவுளை உள்ளத்தின்