பக்கம் எண் :

48தணிகைப் புராணம்

களிலுமுள்ள நீர், மலர்களோடுகூடிய கிளைகளையுடைய வஞ்சி மரங்களைப் பக்கத்தே அணிந்ததற்குப் பொருந்த விரிந்த ஊர்களாகிய அரண்கெடும்படி பெருகி மேற்செல்லும். அவ்வூர்கள் அந்நீரின் தொழின் முடிவடையா வண்ணங் காஞ்சி மரத்தாற் சுற்றப்பட்டிருப்பதற்கியைய நீரானது வாசனை பொருந்திய மருதமரக் கூட்டங்களால் அவ்வூரை யழிக்கும்.

(வி - ம்.) பாங்கர் - பக்கம்; பைத்து - விரிந்து; அவை - ஊர்கள்; வஞ்சியணிந்தவர் பகைமேற் செல்வர்; அதன் றொழின்முற்றாமை - வஞ்சியணிந்து பகைமேற் செல்லுந் தொழின் முடிவுபெறாமை; வஞ்சி யணிந்தாரைக் காஞ்சியணிந்தாரெதி ரேற்றல் முறையாகலின் இவ்வூர்களுங் காஞ்சிமரத்தாற் சுற்றப்பட்டு நிற்றல் எதிரூன்றலாம். "வெருவ மேற்செறல் வஞ்சி மீட்டெதிரூன்றல் காஞ்சி" என்னு நிகண்டானறிக. நறைநீர் - தேனாகிய நீர்; நதிகால்கள் செல்லுமென இடத்தினிகழ் பொருளின் றொழில் இடத்தின் மேனின்றது. அவை சுட்டுப்பெயர்.

(76)

 காலிரு மருங்கு நீண்ட கரைக்கலித் தெழுந்த வேழம்
 வாலிய பூத்து நிற்கும் வண்ணஞ்செங் களத்துப் போர்வேட்
 டாலிய மன்னர் சேனை யணிவகுத் துடற்ற வேந்தும்
 வேலிருங் கூட்ட மென்ன விளங்குவ விடங்க டோறும்.

(இ - ள்.) அம் மருதநிலத் திடங்களெங்கும் கால்வாய்களினிரு மருங்கும் வளைந்துநீண்ட கரைக்கண்ணே தழைத்தெழுந்த கொறுக்கச்சித் தட்டைகள் வெள்ளியவாகப் பூத்து நிற்கின்ற தன்மை போர்க்களத்துப் போரை விரும்பி முழங்கிய பகையரசர் படையை யணிவகுத்தெழுந்து செல்லுகையில் வகுத்துள்ள பெரிய வேலின் கூட்டங்களென்று சொல்லும்படி விளங்கும்.

(வி - ம்.) மன்னர் அணிவகுத்து உடற்ற ஏந்தும் வேலிருங் கூட்ட மென்ன விளங்குமென முடிக்க. கலித்த - தழைத்த; வேழம் - கொறுக்கச்சி; இது ஒரு நாணல் விசேடம்; வாலிய - வெள்ளிய; செங்களம் -போர்க்களம்; 'செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த' என்னுங் குறுந்தொகை யடியானுணர்க. ஆலிய -
முழங்கிய.

(77)

 அளிநரம் புளர நாரை யமிழ்திசைப் பீலி யூதத்
 தெளிதிரை முரச மார்ப்பச் சேவடி கம்புள் சூட
 நளிசிறைக் குரண்டந் தாழ்ந்து நலத்தக வொடுங்கி நிற்ப
 மிளிர்மணி மலர்மே லன்னம் வீற்றிருப் பனநீ ரோடை.

(இ - ள்.) வண்டுகள் நரம்புக் கருவியினிசை போன்ற விசையைப் பாடவும். நாரைகள் தேவாமிர்தம் போலுமிசையை யுடைய சிறு சின்னங்களை யூதவும், தெளிவாகிய அலைகள் முரசினொலிபோ லொலியைச் செய்யவும், தண்ணீருள் மூழ்கிச் செல்லும் சம்பங் கோழிகள் (அன்னப் பறவைகளின்) சிவந்த பாதங்களை முடியிற்கொள்ளவும், குளிர்ந்த சிறையினையுடைய கொக்குகள் வணங்கி நன்மை பொருந்த ஒடுங்கி நிற்கவும், அம் மருதநிலத்துள்ள நீரோடைகளில் கொட்டைகள் விளங்குகின்ற தாமரை மலரின்மேல் வேறொன்றற்கில்லாத சிறப்புடன் அன்னப் பறவைகள் கொலுவிருக்கின்றன வென்க.