பக்கம் எண் :

50தணிகைப் புராணம்

 பண்டொரு கோள்வாய்ப் பெய்து பாற்றிய காரிப் புத்தேள்
 மிண்டிய கோள்க ணாள்கள் வேறுள மீன முற்றும்
 உண்டுபின் னுமிழ்வ போல வுரைத்தவன் னவற்றை யெல்லாங்
 கொண்டுள மடக்கிக் கால்வ குருமலர்ப் பொதும்ப ரீட்டம்.

(இ - ள்.) நிறம் பொருந்திய மலர்களையுடைய சோலையின் கூட்டங்கள் முற்காலத்தில் மழைக் கோளாகிய சுக்கிரனை உட்கொண்டு கக்கிய வைரவக் கடவுள் நெருங்கிய ஏனைய எட்டுக் கோள்களையும் இருபா னெழுநாள்களையும் வேறுள்ளனவாகிய மீன்கள் யாவற்றையும் உட்கொண்டு பின் உமிழ்வபோல மேற்சொல்லிய நாள்கோள் முதலிய வற்றையெல்லாம் அகத் தடக்கிக்கொண்டு
கக்குவனவாம்.

(வி - ம்.) சுக்கிரனைச் சாத்தனுண்டு பின்னுமிழ்தலைக் காசிக் கண்டத்திற் காண்க. காரிப்புத்தேள் - ஐயனார்; கோள் - நவக்கிரகம்; உளம் - அம்; சாரியை, குரு - நிறம்; முன்னர்க் கூறினாம்.

(81)

வேறு

 புரிமுறுக் குடைந்து தேறல்வார்ந் திழியும்
           புதுமலர்க் கற்பகம் வளைந்த
 விரிபுகழ்த் துறக்க வேந்துதெய் வதமாய்
           மேதக வதிந்தகா ரணத்தால்
 உரிமைகொண் டுகைக்கு மூர்தியாந் தாமு
           முடங்கவட் பயில்வது போலாம்
 வரியளி முரலும் பொழிறொறு நிவந்த
           மதிறொறு மழைக்குலம் பயிறல்.

(இ - ள்.) வரிப்பாட்டினை வண்டுகள் பாடுஞ்சோலையிடங்களிலும் உயர்ந்த மதில்களிலும் மேகக்கூட்டங்கள் தங்குதல், கட்டவிழ்ந்து தேன்பெருக்கெடுத்தொழுகுகின்ற அன்றலர்ந்த பூக்களையுடைய கற்பகச் சோலை சூழ்ந்த புகழ் விரிந்த துறக்க நாட்டிற்கு வேந்தனாகிய இந்திரன் (இம்மருத நிலத்திற்கு) அதி தெய்வமாகி மேன்மை பொருந்தத்தங்கிய காரணத்தால் (அவ்வேந்தன்) உரிமையாகக் கொண்டு செலுத்தும் மேகவாகனமாகிய தாங்களும் (அவனுடன்) சேரத்தங்குதலை
யொக்கும்.

(வி - ம்.) தாமும் என்றது மேகமும்; உம்மை யிறந்தது தழீ இயது.

(82)

 மணிநிறக் கமுகு மிடறிறக் கலித்த
           வாய்விரி யாதமென் பாளை
 துணிபுனற் கயத்துத் தோற்றிய நிழலைச்
           சூர்த்தவன் மீனென வெருவி
 அணிமலர் மிசையா தகலெரு மையின்பி
           னடரிரு டுரந்துசென் மதிபோல்
 திணிமுலை யொழுக்குந் தீம்பய னுகர்ந்து
           செல்லுவ சிறையனத் தொழுதி.