பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்625

 நிரைபுகுத்திப் புல்லருத்தி நித்தலுநீர்
           மயம்புறத்து நீக்கி யேதம்
 வரைவுசெய்தட் டமிதொறுநீ ராட்டிமலர்
           சூட்டியன்னம் வனமு மூட்டிப்
 புரைதபுபூ சனைபுரிவோர் புராரியுல
           கத்தினிது புகுந்து வாழ்வார்.

(இ - ள்.) நறுமணப் புகைகாட்டி மலர்மாலை தூங்கவிட்டு, மெல்லச் 'சுவத்தி' என்கிற மங்கலமொழியைக்கூறி ஆனிரையை அக்கொட்டிலில் புகுத்தி அவற்றிற்குப் புல்லிட்டு நாடோறும் மூத்திரஞ்சாணகம் இவற்றை அகற்றிக் குற்றமுண்டாகாமல் பாதுகாத்து அட்டமிதோறும் அவற்றை நீராட்டி மலர்சூட்டி மடைச்சோறும் நீரும் ஊட்டிக் குற்றந்தீர்ந்த வழிபாடுஞ் செய்வோர் சிவலோகத்தின்கண் எய்தி இன்புற்று நெடிது வாழ்ந்திருப்பர்.

(வி - ம்.) விரை - நறுமணப் பொருள். ஈண்டு - அகில் முதலியன. சுவத்தி : ஒருமங்கலச் சொல். அன்னம் - ஈண்டு மடைச்சோறு. வனம் - நீர். புராரி - சிவபெருமான்.

(495)

 சிவபுரத்திற் பெரும்போகந் துய்த்தறலு
           முராரிமற்றோர் சூழ லெல்லாம்
 இவர்வளத்த போகமுண்டுண் டெழுந்தவட
           கிரியெய்திக் குருவென் றோதும்
 அவமறுகண் டத்தமர்ந்து பாரதம்பி
           னடுத்துமுன்வா தனையான் மீட்டும்
 நவமுறவான் சாலைபுரிந் தரற்கானைந்
           தாட்டிமுத்தி நண்ணு வாரால்.

(இ - ள்.) இவர் அச்சிவலோகத்தின்கண் பேரின்பந் துய்த்து முடிந்த வளவிலே திருமால் முதலிய தேவர் உலகமெல்லாம் வளமுடைய இன்பநுகர்ச்சி எய்தி எய்திப் பின் வடமேருவை யடைந்து ஆண்டுக் குருகண்டம் என்று கூறப்படும் குற்றமற்ற கண்டத்தே பிறந்தின்புற்றிருந்து, பின்னர்ப் பாரதகண்டத்திலே வந்து பிறந்து பண்டைய வாதனைக் காரணமாக மீட்டும் புதுமையுறும்படி அவ்வான் சாலையே இயற்றி இறைவனுக்கு ஆனைந்துமாட்டிக் கால அடைவிலே பரமுத்தியையும் தலைப்படுவர்.

(வி - ம்.) முராரி - திருமால். வடகிரி - மேரு. வாதனை - பழக்கம்.

வேறு

 வேனிலிற் பொதும்பர் நீழல்சே ரிடத்தும்
           வீங்குநீர் மழைமலைச் சாரல்
 கானினு மிமத்திற் கதிர்வெயில் விரிக்கும்
           வெளியினுங் காழிடர் கடிந்திட்