பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்635

சீபரிபூரண நாமப் படலம்

 வளங்கு லாவிய போகங்கண் மதிப்பினு மாவி
 துளங்க மேவிய வினையொரீஇத் தொலைவில்வான் பதத்தின்
 உளங்கு லாவுற வேண்டினு மொல்லையுய்த் தருளும்
 விளங்கு சீபரி பூரண விலங்கலைப் பணிவாம்.

(இ - ள்.) (ஆன்மாக்கள்) வளப்பமிக்க போகங்களைக் கருதினாலும் தாங்கள் வருந்துதற் கேதுவாகப் பொருந்திய வினைத்தொகையினின்றும் நீங்கி எஞ்ஞான்றும் ஈறில்லாத உயரிய வீட்டின்பத்தின்கண் மனமானது பொருந்த விழையினும் இவ்விரண்டினையும் விரைவிற் றருகின்ற விளக்கமுற்ற சீபரிபூரண மென்னும் பெயரையுடைய திருமலையினை வணங்குவாம்.

(வி - ம்.) சீ - செல்வம், வீடென்னு மிருபொருட்கு மொருசொல். பூரணம் - நிறைவு. வளங்குலாவிய போகங்கள். இம்மை மறுமையின்பங்கள். ஆவிமதிப்பினும் வேண்டினும் அருளும் விலங்கல் என வினைமுடிவு செய்க. ஆவி துளங்க மேவியவினை யென்க. தொலைவில் வான்பதம் - ஈறில்லாத வீட்டின்பம். பதம் : ஆகுபெயர். துளங்கல் - வருந்தல், சீ பரிபூரணம். பக்திமுத்திகளின் நிறைவைக் கொடுத்தல்.

(1)

வேறு

 முன்னரொரு கற்பகத்தின் மொழிசாக மெனுந்தீவின்
 மன்னன்பிர பாகரன்சேர் மனைவிசுகு மாரிபால்
 நன்னரிரு மகவுடங்கு நண்ணினவெவ் வேறிரண்டு
 பின்னருதித் தனவிந்தப் பெருந்திறனான் மகவுக்கும்.

(இ - ள்.) முன்னொரு கற்பத்தின்கண் யாவராலும் புகழ்ந்து சொல்லப்படுகின்ற சாகமென்னுந் தீவின்கண் (செங் கோலோச்சிய) பிரபாகர னென்னும் அரையன் (வேதவிதிப்படி) மணந்த சுகுமாரி யென்பவள்மாட்டு நன்மை பொருந்திய இரு குழவிகள் ஒருசேரத்தோன்றின. பின்னர் இரு குழவிகள் வெவ்வேறாக வுதித்தன. இங்ஙனந் தோன்றிய மிக்க வலிமையினையுடைய நான்கு குழவிகளுக்கும்.

(வி - ம்.) கற்பம் - ஊழி. சேர்மனைவி : வினைத்தொகை.

(2)

 தந்தைசூ ரன்பன்மன் சிங்கன்றா ரகனெனும்பேர்
 பந்தமுறச் செய்துலகம் பரேரெறுழ்த்தோட் பரிப்பித்துக்
 கந்தமலி குழலியொடுங் கானடைந்து தவமுயன்றான்
 அந்திலவர் முறைசெலுத்தி யரசுபுரி யவ்வெல்லை.

(இ - ள்.) பிரபாகர னென்னுந் தந்தை அக்குழவிகளுக்குச் சூரன், பன்மன், சிங்கன், தாரகன் என்னும் பெயரினை முறையே அன்புடனிட்டு (தன்னாட்சியிலுள்ள) உலகினை மிக்கவழகினோடு கூடிய அவர்கள் பருத்த அழகினையும் வலியினையும் உடைய புயத்தின்கட் சுமப்பித்து