பக்கம் எண் :

640தணிகைப் புராணம்

 வேனவிறோண் மைந்தர்பலர் வீறவுயிர்த் தேவல்புரி
 வானவரை வலாரிமக னொடுஞ்சிறைவைத் தமர்நாளில்.

(இ - ள்.) அசுரர்கள் மகிழ்ச்சியிற்றங்கப் பெருமை பொருந்திய கடற்கண்ணே நகரினை அமையச்செய்து ஆண்டிருந்து முடியினையணிந்து தெய்வப் பெண்களை யொத்த பெண்களை மணஞ்செய்து, வேற்படை பொருந்திய கைகளையுடைய பல மைந்தர்களை வேறொருவர்க்கில்லாத சிறப்புறப் பெற்றுக் குற்றேவல் செய்கின்ற தேவர்களை இந்திரன் மகனாகிய சயந்தனுடன் சிறையின்கண் வைத்து இருக்கின்ற காலத்து.

(வி - ம்.) தூங்க - தங்க. ஆன் - அவ்விடம். மன்னும், சின்னும் என்ற சூத்திரத்தானுணர்க. வேல்நவில் தோள் - வேற்படை பொருந்திய கை.

(13)

வேறு

 ஏவ லிற்றணந் தோடி மேருவை யெய்தி மாதவ மாற்றுறும்
 காவல் விண்முழு துற்ற வன்கதிர் வென்ற வன்கடி பொன்னகர்
 மேவ ழற்குண வாக்கி மைந்தனை வெஞ்சி றைக்கிடல் கேட்டலும்
 ஆவ வென்றுபு லம்பி யேத்தவ டுத்த னன்கயி லைக்கிரி.

(இ - ள்.) ஏவற்றொழிலினின்றும் நீங்கிச் சென்று மேருமலையினை அடைந்து பெரிய தவத்தினையியற்றும் தேவலோகம் எல்லாவற்றையுங் காத்தற்றொழில் புரியும் இந்திரன், சூரியனை வென்றவனாகிய பானுகோபன் காவலோடுகூடிய அமராவதியென்னும் நகரைப் பொருந்திய தீயினுக்குணவாகச் செய்து சயந்தனை வெவ்விய சிறைச்சாலையிலிட்டதைக் கேட்டவளவில், ஐயோ வென்று புலம்புதலைச் செய்து துதிக்கக் கைலையங்கிரியை யண்மினான் என்க.

(வி - ம்.) இந்திரன் தனது நகரத்தை அழற்குணவாக்கி மைந்தனைச் சிறைக்கிடல் கேட்டலும் என்க. விண்முழுதுங் காவலுற்றவனெனக் கூட்டுக. கதிர் வென்றவன் - பாநுகோபன்; சூரன்மகன். ஆவ - ஐயோ, இரக்கக் குறிப்பு.

(14)

 தக்கன் வேள்வியி லன்று டங்குத விர்ந்தி கந்தபெ ரும்பிழை
 புக்கு டற்றிய வீர னானனி போக்கி யெச்சமு நீக்கிய
 மிக்க சூரனை யுய்த்த நாயகன் மெல்லி யலிம யம்புகத்
 தொக்க நால்வர்த மக்கு ணர்த்துபு தூய யோகினி ருத்தலின்.

(இ - ள்.) அக்காலத்துத் தக்கன் செய்த யாகத்தின்கண் அவனுடன் தங்கி இகழ்ந்த பெரிய (உய்தியில்) குற்றத்தை அவ் யாகசாலையின்கட் புகுந்து (ஆண்டுள்ளாரை) வருத்திய வீரபத்திரக் கடவுளால் (அக்குற்றத்திற்குத் தக்கவாறு ஒறுத்து அக்குற்றத்தை) நீக்கி, எஞ்சிய குற்றங்களையும் நீக்க, வீரம் செல்வம் முதலியவற்றால் மிகுந்த சூரனைச் செலுத்திய இறைவன், மென்மைத் தன்மையை இலக்கணமாகவுடைய உமையம்மையார் இமயமலையின்கண்ணே செல்ல (ஐயமுற்றுத் தன் பக்கலிலே வந்து) கூடிய சனகர் முதலிய நால்வர்க்கும் (ஐய முதலிய