பக்கம் எண் :

664தணிகைப் புராணம்

 ஆர டுத்தமணி யாழிகள்சி தர்ந்து விழவெஃ
 றேர னைத்தையு மெறிந்துதிரள் வீர ரையெலாம்
 காரு வர்க்கடல்க டாயினனு லம்ப வெதிர்செல்
 வீர சிங்கம்விடு வாளிமுடி வீழ்த்த தவனி.

(இ - ள்.) தாரகனென்பான் ஆரக்கால் செறிந்த அழகிய உருளைகள் சிதறிவிழப் பகைவரை வெல்லுதற் கேதுவாகிய தேர்களையெல்லாம் உடைத்துப் போரின்கண் திரட்சியுற்ற வீரர்கள் யாவரையும் உப்பினையுடைய கரிய கடலின்கட் போய்விழ எறிந்தனன். இதனைக் கண்டு தாரகன் வருந்த அவனெதிரிற் சென்ற நவவீரர்களிலொருவனாகிய வீரசிங்கனென்பான் விடுத்த அம்புகள் தாரகன் முடியினை நிலத்தின்கட் டள்ளிய தென்க.

(வி - ம்.) ஆர் - ஆரக்கால். ஆழி - உருள். கார் - கரிய. உலம்ப - வருந்த.

(76)

 உட்கி யோர்கதைம டங்கலுயிர் சோர வுகையா
 வட்கி லானிரத மெய்திமணி மோலி கவியூஉத்
 தட்கும் வார்சிலைத டிந்துபொரு தீர னயரக்
 கட்கு லாந்தொடையன் மார்பிலொரு சூல்க டவினான்.

(இ - ள்.) தாரகன் வருந்தி ஒப்பற்ற தண்டமொன்றினை வீரசிங்கனுயிர் தளர்ச்சியுறச் செலுத்தி நாணில்லாத அவன் தேரின்கட் பொருந்தி அழகிய வேறு முடியினை அணிந்து பகைவரைப் போரின்கண் தடைசெய்யும் வீரதீரன் நீண்ட வில்லினை வெட்டி வீழ்த்திப் போர் செய்கின்ற அவன் சோர்வடையத் தேன் பொருந்திய மாலையை யணிந்த அவன் மார்பின்கண்ணே ஒரு சூலத்தைச் செலுத்தினா னென்க.

(வி - ம்.) உட்கல் - வருந்தல். மடங்கல் - ஈண்டு வீரசிங்கன். வட்குதல் - நாணுதல். இதனை "வட்கிவெண் மதியஞ் செவிகெட வொளிரு மாடமார் குண்டின புரமே" என்னும் நளன் கதையானு மறிக. மோலி - முடி. தட்கும் - தடுக்கும். இதனை "ஒக்கல் வாட்கை தட்கு மாகாலை" என்னும் புறநானூற் றடியானு முணர்க. தீரன் - வீர தீரன். இவனும் நவவீரர்களிலொருவன்.

(77)

 ஆடு போர்க்கொருவ னானவிறல் வாகு சமரம்
 நீட வேனையளை யோர்களுநி கழ்த்தி யுடையும்
 பாடு கண்டுழல்ப கட்டிரத மூர்ந்து சினவிச்
 சோடை நெஞ்சினன்ஞெ ரேலெனவெ திர்ந்து துனையா.

(இ - ள்.) வெற்றியைத் தருதற்கேதுவாகிய போரினுக் கொருவனாகிய வீரவாகு என்பவன் போர் நீட்டியா நிற்க (வீரசிங்கன் வீரதீரனாகிய இருவரை யொழிய) ஏனைய இளவல்களும் போரினைச் செய்து (தாரகனுக்குத் தோற்று) வெந்நிடுந் தன்மையைக் கண்டு போரிலிடசாரி வலசாரியாகச் சுழல்கின்ற தேரினைச் செலுத்திச் சீற்றங்கொண்டு