பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்83

நோக்கி - கருதி. பயில்வது - தங்குவது. மானமா, தன் மயிர் யாப்ப மேற்செல்லாதுநிற்றலைப்போலவே, தினையருந்தக் காலம் பார்த்துத் தங்குவதுமுள்ளதென முடிக்க.

(155)

 பூரி யோர்குழாஞ் சீரியர் சீரியோர்
           பொதியிற்பூ ரியர்சேரில்
 சேரு மவ்வவ ராகவே மதித்திடப்
           படுவராற் செறிபண்ணை
 வாரு நாகவல் லிகளுராய்க் கறியென
           மலைக்கறி யுடன்மேவும்
 கூரும் வெள்ளிலை யுடனது வெனக்கறி
           கூடுவ தொருபாங்கர்.

(இ - ள்.) (நற்குண நற்செய்கைகள் சிறிதுமிலவாகிய) கீழ் மக்கள் கூட்டுறவினையும், (நற்குண நற்செய்கைகள் நிறையப்பெற்ற) சான்றோருடைய கூட்டுறவினையும் முறையே சான்றோர் பொதியினும் கீழோர்கள் சேரினும் பொருந்தும் அவ்வக்குழுவினராகவே உலகத்தாரால் மதிக்கப்படுவர். (அதுபோல) பல வளங்களும் செறிந்த மருத நிலத்தின்கண் நேராக ஓடுகின்ற வெள்ளிலைக் கொடிகள் தம்மிடத்தினின்றும் பெயர்ந்து கண்டார் மிளகுக் கொடியெனக் கருதும் வண்ணம் குறிஞ்சி நிலத்துள்ள மிளகுக்கொடியுடன் பொருந்தும். மருதநிலத்திலுள்ள மிக்க வெள்ளிலைக்கொடிகளோடு அவ்வெள்ளிலைக் கொடியெனக் கருதும் வண்ணம் குறிஞ்சி நிலத்தின் கண்ணும் மிளகுக்கொடி பொருந்துவது ஒருபக்கத்துள்ளது.

(வி - ம்.) நிரனிறை. பூரியோர் - கீழோர். சீரியோர் - மேலோர். வாருதல் - நீடல். "வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. நாகவல்லி - வெற்றிலை. கறி - மிளகுக்கொடி.

(156)

 வேழ மென்றுதன் பெயர்கொளத் தகாதென
           வெகுண்டகன் பணையண்மி
 வேழம் யாவையும் வரைத்தலை வேழங்கள்
           வீத்துணப் பகடென்ன
 வாழி தன்பெயர் கொண்டதென் னெனச்சினைஇ
           மதமலை வறங்கூர
 வாழை யாதிகற் புகுந்திருங் கடாவடும்
           வனப்புமா யிடைமல்கும்.

(இ - ள்.) குறிஞ்சி நிலத்துள்ள யானைகள் (மருதநிலத்துள்ள கரும்புகளானவை) தம் பெயர்களை வேழமெனக் கோடல் தகாதெனச் சீற்றங்கொண்டு அகன்ற மருதநிலத்தினை யணுகி ஆங்குள்ள கரும்பினங்களெல்லாவற்றையும் அழித்துண்ணா நிற்ப, மருதநிலத்தின்க