பக்கம் எண் :

836தணிகைப் புராணம்

(வி - ம்.) வெற்றுடம்பு - உணர்ச்சியற்றவுடல். ஆறுபு - ஆறி; ஆற என்க. பற்றும் - தான்கைப்பற்றியுள்ள. முற்ற - முழுதும்.

(527)

 மனமும் பிற்பட வேகிய தூதுவர் மாற்றம்
 தனையு ணர்ந்துப லண்டமுந் தவிர்ந்தபல் படையும்
 துனைய வெய்துவா னெழுந்தன முந்துறுந் தூசி
 கனைக டற்புவி நிறைந்துமே லுலகெலாங் கஞன்ற.

(இ - ள்.) மனோவேகமும் பிற்படும்படி விரைந்துபோன தூதுவர் கூறிய கட்டளை மொழியினைக் கேட்டுணர்ந்து அண்டம் பலவற்றினும் உறைந்த பல்வேறு படையும் விரைந்து புறப்பட்டன. அவற்றுள் முற்பட்ட தூசிப்படை ஆரவாரிக்கும் கடல்சூழ்ந்த நிலவுலகமெங்கும் நிரம்பி இடம் இன்மையால் வானுலகத்தினும் சென்று செறிந்தன.

(வி - ம்.) மனம் - மனத்தின்செலவு. மாற்றம் - மொழி. தவிர்ந்த - உறைந்த. தூசி - முற்செல்லும்படை. கஞன்ற - செறிந்தன.

(528)

 ஆடிப் பூசியுண் டணிந்தருங் கலன்றுகின் மற்றும்
 நாடிச் சேனைகட் களித்தெவ்வே ழயுதநற் பரிமா
 பாடற் பேயரி மாவிவை பண்ணமை பொற்றேர்
 கூடிப் பல்லிய மியம்பவா ளவுணர்கோ னிவர்ந்தான்.

(இ - ள்.) அவ்வாறு வந்துற்ற படைகளைக் களியாடச்செய்தும், நறுமணச்சாந்தம் முதலியன பூசுவித்தும், மலர்மாலை முதலியன அணிவித்தும், மேலும் வரிசையறிந்து அரிய அணிகலன் ஆடை முதலியனவும் பரிசிலாக வழங்கியபின்னர், எழுபதினாயிரம் சிறந்த குதிரைகள், எழுபதினாயிரம் பாடாநின்ற பேய்கள், எழுபதினாயிரம் அரிமான்கள் என்னும் இவற்றோடு பண்ணுறுத்தப்பட்ட பொன்னாலியன்ற தேரின் மேலேறித் தன்னைச் சூழ்ந்து குழுமி பல்வேறுவகை இசைக்கருவிகள் முழங்காநிற்ப, வாளேந்தும் அவ்வவுணர்வேந்தன் செலுத்திச் சென்றான்.

(வி - ம்.) ஆடி - ஆடுவித்து. பூசி - பூசுவித்து. அணிந்து - அணிவித்து என்க. நாடி - வரிசையான் ஆராய்ந்து. ஆயுதம் - பதினாயிரம்.

(529)

 இறைவ னல்கிய விந்திர ஞாலமு மூரும்
 விறன்ம டங்கலு முழையவ ருடன்கொண்டு மேவ
 நிறைது கிற்கொடி நுடங்கவெண் ணிலாக்குடை நிழற்றச்
 செறிவு கொண்டசா மரைபுடை யலமரச் சென்றான்.

(இ - ள்.) ஏவலர் அவ்வவுணனுக்குப் பரமசிவன் வரமாகவழங்கிய இந்திரவிமானத்தையும் அவன் ஊராநின்ற வெற்றியுடைய சிங்கத்தையும் கூடவே கொணராநிற்பவும், வானமெங்குநிறைந்த துகிற்கொடிகள் ஆடவும், வெள்ளிய நிலவுவிரிக்கும் திங்கட்குடை நீழலைச் செய்யவும், நெருங்கிய வெண்சாமரைகள் இருமருங்கும் அசையாநிற்பவும் சென்றனன்.