பக்கம் எண் :

852தணிகைப் புராணம்

(இ - ள்.) சூரபதுமன் இந்திரஞாலத் தேரினைச் செலுத்திச்சென்று இரண்டாயிரம் வெள்ளம் படைகளை மற்றையோர் நெஞ்சத்தை மயங்கச் செய்து யாரும் அறியாமல் ஏற்றிக்கொண்டு திணிந்துயர்ந்துள்ள அண்ட முகட்டினை அடைந்து ஆங்கிருந்ததனை எம்பெருமான் நோக்கி ஒரு கணையினை ஏவ அஃது ஆங்குச் சென்று அத்தேரோடு இழுத்துவந்தது. அதன்கண் இருந்த நிறமிக்க வீரர்கள் எல்லாம் மண்ணிலே குதித்தனர்.

(வி - ம்.) விடுத்தனன் - முற்றெச்சம். மயக்குபு - மயக்கி. அந்தில் - அசை; அவ்விடமுமாம். தெவ்வி - கொண்டு. குப்புறல் - குதித்தல்.

(572)

 ஏகலை நிற்றியெ னச்சுழ லிந்திர
           ஞாலநி றுத்தின னெங்கோமான்
 ஆகிய வண்ணம றிந்தவு ணர்க்கிறை
           யாடுசி லைத்தொழில் கைக்கொண்டு
 பாகனு யங்கமெய் யெங்கு மிருக்கணை
           பாய்த்தின னெம்பெரு மானான்
 வேகநெ டுஞ்சிலை சிந்தினன் வாளரி
           மீதுந டத்திம றச்சூரன்.

(இ - ள்.) எம்மையாளுடைய இறைவன் சுழலாநின்ற அவ்விந்திர ஞாலத்தேரினை நோக்கி நீ இனி இயங்காதே கொள்! என்று கையானமர்த்தினன். இந்திரஞால மியங்காத அத்தன்மையை யுணர்ந்த சூரபதுமன் கொல்லும் விற்றொழிலை மேற்கொண்டு எம்பெருமானுடைய தேர்வலவன் வருந்தும்படி அவனுடைய உடலெங்கும் பெரியகணைகளைச் செருகினான். அதுகண்ட எம்பெருமான் அச்சூரபதுமனுடைய விரைவுடைய நெடிய விற்படையினை ஒடித்தொழித்தனன். அதுகண்ட மறப் பண்புமிக்க அவ்வவுணன், ஒளியுடைய சிங்கத்தின்மேலேறி நடத்தி,

(வி - ம்.) ஏகலை - இயங்காதேகொள். ஆகியவண்ணம் - அதனால் உண்டான தன்மை. பாகன் - காற்றுக்கடவுள். வாள் - ஒளி ; வாள் போலும் சிங்கமுமாம்.

(573)

 ஈசன ளித்தருண் முச்சிகை வேல்கொண்
           டெறிந்தனன் மாற்றவெ ழிற்செவ்வேள்
 ஆசுக மாயிர முய்த்தன தின்றட
           ரக்கர வச்சிர மேலேவி
 வீசொளி முச்சிகை வௌவிவி டாதது
           மீளவு டங்குக ரத்திட்டுக்
 கேசரி மாயவி ராயிர வாளிகள்
           கீழ்ந்தெழ நெற்றியு றுத்தானால்.

(இ - ள்.) சிவபெருமான் வழங்கியருளிய முத்தலைவேலை எடுத்து எறிந்தனன். அம்முத்தலை வேலினை மாற்றுதற்கு, அழகுமிக்க எம்பெருமான்