பக்கம் எண் :

880தணிகைப் புராணம்

பேரன்பு புலப்பட உயரிய மறையின்கண்ணுள்ள வாழ்த்துப் பாடல் தனது நாவினின்று கூத்தாடச் சாமிநாதன் என்னும் முருகப்பெருமானுடைய அருள்பொங்கி வழியும் கடைக்கண்நோக்கத் தழகையும் செந்தாமரை மலர்போன்ற திருமுகத்தெழிலையும் காண்போர் கண் கூசுமாறு செவ்விபெற்று ஒளிவீசாநின்ற திருவுருவத்தெழிலையும் ஒருசேர அள்ளிப் பருகினன்.

(வி - ம்.) மண்ண - குளிப்பாட்ட. கடைநோக்கு - கடைக்கண் நோக்கம். சாமிநாதன் - முருகப்பெருமான்.

(8)

 நெடிது போதவச மாயெதிர் நின்று
           நிறைந்த கோலமுள முற்றிய பின்றை
 நடலை வாழ்வினைய றுக்கும ருந்து
           ஞான சத்திதர னாண்மலர் வென்ற
 வடிக ளல்லதிலை யென்றுக தித்த
           வற்பு தத்தினொடு மாயிடை நீங்கித்
 தொடிபொ லிந்தகர மார்பொடு பின்னிச்
           சூழ்ந்து தாழ்ந்தொரும ருங்கி னிருந்தான்.

(இ - ள்.) நீண்டபொழுது தன்னைமறந்து எம்பெருமான் திருமுன்னர் நின்று நிரம்பிய அவனுடைய பேரழகு தன்னெஞ்சத்தே நன்குபதிந்த பின்னர், பொய்யாய வாழ்க்கையையுடைய பிறவிப்பிணியைத் தீர்க்குமருந்து ஞானசத்தி ஏந்திய இப்பெருமானது புதிய செந்தாமரை மலரை வென்ற திருவடிகளை யன்றிப் பிறிதில்லை என்றெழுந்த மருட்கையோடும் அவ்விடத்தினின்றும் அகன்று தொடி பொலிவுற்ற கைகளை மார்போடு பொருந்தக் கட்டிக்கொண்டு வலம்வந்து வணங்கி ஒருசார் அமர்ந்திருந்தனன்.

(வி - ம்.) அவசம் - தன்னைமறந்து நினைந்ததன் வண்ணமாதல். கோலம் - அழகு. ஞானசத்தி - ஈண்டு வேற்படை. தொடி - ஒரு தோளணி.

(9)

 மாலை யாமமும கிழ்ந்து வணங்கி
           வைக றைப்பொழுது பாதியி றந்த
 வேலை நீறுடல ணிந்து தியானம்
           விளங்கு மந்திரந வின்றுக ணித்தல்
 சால வாற்றியயல் போந்துகு டாது
           சார ணித்தலைவ யங்குசு னைக்கண்
 ஏல நாட்கடன்மு டித்தவண் வைகி
           யிரித்து வன்பொறியி ருந்தவ முற்றான்.

(இ - ள்.) மாலைப்பொழுதினும் இடையாமத்தினும் உளமகிழ்ந்து எம்பெருமானை வழிபாடுசெய்து வைகறை யாமத்தினும் பாதி கழிந்த பின்னர் திருநீறு உடலின்கண் அணிந்து தியானஞ்செய்து விளங்கா