பக்கம் எண் :

884தணிகைப் புராணம்

(வி - ம்.) நாடாது - இரப்போர் தகுதியை ஆராயாமல். தகைத்தல் - நிறுத்திவைத்தல். தனக்கேயுரிய வள்ளன்மையைத் தன்னடியார் பாலும் நிறுத்திவைத்தவன் என்க. குருநாதன் - ஞானாசிரியர்க்கெல்லாம் தலைவனாகிய ஞானப் பேராசிரியன். போலும் : ஒப்பில்போலி.

(16)

 பாறாடு செங்களத்துப் பற்றார் திரண்முருக்கி
 ஆறாடு கண்ணீ ரமரர் சிறைமீட்டோன்
 நீறாடு மேனி நிமலன் வலத்துயிர்த்த
 தேறாத வேதற் சிறையிட்டோன் போலும்
 தேவியுமை கண்களிக்குஞ் செல்வமே போலும்.

(இ - ள்.) பருந்துகள் நடமாடுதற்கிடமான குருதியாற் சிவந்த போர்க்களத்தின் கண் அசுரராகிய பகைவருடைய கூட்டத்தைக் கொன்று ஆறுபோன்றொழுகும் துன்பக் கண்ணீரையுடைய தேவர்களைச் சிறையினின்றும் மீட்டவன் (யாவனெனில்?) திருநீறு சண்ணித்த திருமேனியையுடைய சிவபெருமான் தனது பேராற்றலினின்றும் ஈன்றருளப்பட்டுப் பிரணவமறியாத பிரமதேவனைச் சிறையிட்டவனேயாவன் உமையம்மையார் கண்கள் களித்தற்குக் காரணமான குழந்தைப் பெருமானே ஆவன்.

(வி - ம்.) பாறு - கழுகுமாம். பற்றார் - பகைவர். வலம் - வலி. வேதன் - பிரமன். செல்வம் : ஆகுபெயர் - மகவு.

(17)

 தேக்கு மறைமற்றுந் தெள்ளுந் தமிழ்முனிக்கு
 நீக்கமின் ஞான நிலையருளும் வாய்மையான்
 ஊக்கமி லோமு முணரச் சராசரங்கள்
 தாக்கி லுருவாய்த் தழைத்தபிரான் போலும்
 தந்தைதாய் நாப்பட் டவிர்ந்தமழப் போலும்.

(இ - ள்.) அறிவை நிறைக்கின்ற வேதம் ஆகமம் முதலியவற்றை ஆராயும் அகத்திய முனிவனுக்கு மெய்ப்பொருளினின்றும் தான் வேறென்று நீங்குதல் இல்லாத மெய்யுணர் நிலைமையைச் செவியறிவுறுத்த மெய்ம்மையுடையோன் யாவனெனின் மனவெழுச்சியில்லாத நம்மனோரும் தன்னையுணர்தற் பொருட்டுப் பற்றின்றியே இயங்கு பொருளும் நிலையியற் பொருளுமாகிய அனைத்துருவமாகவும் விரிந்தவனேயாவன் அப்பனும் அம்மையுமாகிய இறைவன் இறைவியாகிய யிருவரிடையே உறைந்த மகவாகிய குமரப்பெருமானே யாவன்.

(வி - ம்.) தமிழ்முனி - அகத்தியன். நீக்கமின்ஞானம் - அத்துவித வுணர்வு. ஊக்கமிலோமும் என்புழி உம்மை இழிவு சிறப்பு.

(18)

 வெளிஞெமிர் ஞான்றீசன் வியங்கொள்ளத் தாங்கி
 வளியழல் வார்கங்கை வருந்தும் வழித்தோன்றல்
 களிஞிமிறுந் தேனுங் கஞலு மணிப்பொய்கை