பக்கம் எண் :

890தணிகைப் புராணம்

விலே இந்திரன் தான் மேற்கொண்டுள்ள அன்பு மிகுதியாலே நிலத்திலே விழுந்து விழுந்து புரண்டும் எம்பெருமானை வலம் வந்தும், கை கொட்டியும் இவ்வுலகத்திலே பெரிய மறைகள் அறிவுறுத்தும் அத்துணையும் வாழ்த்தித் திருமுன்னர் நின்று ஆடினனாக; மாட்சிமையுடைய வச்சிரப்படையையுடைய அவ்விந்திரனுக்குத் திருத்தணிகை மலைமிசை யேறும்படி வரமருளி இறைவன் மறைந்தருளினன்.

(வி - ம்.) கைத்தட்டமிட்டு - கை கொட்டி. கரைந்து - வாழ்த்தி. வச்சிரன் - இந்திரன், ஓங்கல் - மலை.

(6)

 அடம்பு தாதகி கொன்றை சூடம ராப தீசனை யாக்கமார்
 கடம்ப மாநக ரெய்தி வாழ்த்துநர்காத லாற்கழ றாழுநர்
 இடும்பை முற்றுமி ரித்து வேட்டன வெய்து வார்வர மெய்திய
 உடம்பெ லாம்விழி யான வன்கிரி யும்ப ராரொடு சூழ்ந்தனன்.

(இ - ள்.) அடப்பமலர் மாலையும், ஆத்தி மலர்மாலையும், கொன்றை மலர் மாலையும், சூடுகின்ற இறைவனாகிய அமராபதீசனை செல்வம் நிரம்பிய இக்கடம்ப நகரத்தின் கண் வந்து வாழ்த்துவோரும், அன்புடனே அடிவணங்குவோரும், தத்தம் துன்பமெல்லாம் கெடுத்துத் தாந்தாம் விரும்பிய பேறுகளை எய்துவார். அவ்விறைவன்பா லிரந்து வரம் பெற்ற அவ்விந்திரன் ஏனைத்தேவரோடு திருத்தணிகை மலையினை வலம் வந்தனன்.

(வி - ம்.) அடம்பு - ஒருகொடி ; மரமுமாம். தாதகி - ஆத்தி. வாழ்த்துநர் ; முற்றெச்சமுமாம். எய்துவாராக வரமெய்திய என்க.

(7)

 தீர்த்த நேர்ந்தன வாடி யாடிமுன் சென்று தாழ்வரை வைகிய
 கூர்த்த வல்வினை வல்லை யோப்புகு மார தீர்த்தமு வந்துதோய்ந்
 தார்த்த வாணிதி ருத்த மாடிய லங்கு பன்பணி வீங்கிருள்
 வேர்த்தொ துங்கவி மைக்கு நீலவி லங்க லுச்சியி வர்ந்தனன்.

(இ - ள்.) எதிரேகண்ட தீர்த்தங்களிலே ஆடி ஆடித் திருத்தணிகை மலையின் முன்னர்ச் சென்று ஆண்டு மலையடிப் பகுதியிலேயுள்ள, கூரிதான தீவினையை அகற்று மியல்புடைய குமார தீர்த்தத்தினும் மகிழ்ந்து ஆடிப் புள்ளினம் ஆரவாரித்த வாணி தீர்த்தத்தினும் ஆடி விளங்காநின்ற பலவேறுமணிகளும் மிக்க இருள் அஞ்சியோடும்படி மின்னா நின்ற அத்திருமலையுச்சியை ஏறினன்.

(வி - ம்.) நேர்ந்தன தீர்த்தம் என்க. வல்லை - விரைவு. ஒப்பு - ஓட்டும். வேர்த்தல் - அஞ்சுதன் மேற்று.

(8)

 சிலம்பு கிண்கிணி வால்வ ளைத்திர டெள்ளொ ளிக்கலை வார்குரல்
 இலம்ப கத்திமிர் வண்டு மார்ப்பவெ ழான்மு ழாவெழ மங்கையர்
 குலம்பு ரிந்திய லாடல் பாடல்கு லாய கோயின்ம ருங்குபோய்
 வலம்பு ரிந்துயர் வார ணக்கொடி மன்னு சூழல்வ ணங்கினான்.

(இ - ள்.) ஆடன் மகளிர் குழாம் விரும்பித் தம் சிலம்புங் கிண்கிணியும் வெள்ளிய சங்கவளையற்றிரளும் தெளிந்த ஒளியை