பக்கம் எண் :

இந்திரன் அருள்பெறு படலம்891

யுடைய நெடிய மணிமேகலையும் தமது மலர்மாலையின்கண் முரலும் வண்டும் ஆரவாரிப்பவும் யாழொலியும் முழவு முழக்கமும் எழாநிற்பவும் ஆடாநின்ற கூத்தும் இசைப்பாடலும் பொருந்திய திருக்கோயிலின் பக்கலிலே சென்று வலம் வந்து உயரிய கோழிக்கொடி நிலைபெற்றுள்ள சூழலை வணங்கினன்.

(வி - ம்.) கலை - மேகலை. வார் மேகலை என்க. இலம்பகம் - மாலை. எழான் - யாழ். வாரணம் - கோழி.

(9)

 பாயு மும்மத வேழ மூரிறை பாயு மும்மத வேழமாய்
 மேய வாவச்ச காயன் வார்கழல் வீழ்ந்து தாழ்ந்துபு கழ்ந்துபோய்
 நேய மல்குகு மார லிங்கநி லாய சோதிப தந்தொழு
 தாயெ னத்தகு காயி லைப்படை யண்ணன் முன்னர டுத்தனன்.

(இ - ள்.) மும்மதமும் பாயாநின்ற ஐராவதத்தினை ஊர்கின்ற அமரர் கோமான், பாயாநின்ற மூன்று மதங்களையு முடைய யானையாக எழுந்தருளிய ஆவச்சகாயன் என்னும் மூத்த பிள்ளையாருடைய நெடிய கழல் கட்டிய திருவடிகளிலே வீழ்ந்து வாழ்த்தி எழுந்துபோய் அன்பு பெருகுதற்குக் காரணமான குமாரலிங்கத்தின்கண் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருவடிகளையும் தொழுது பின்னர் எவ்வுயிர்க்கும் தாயே என்று கூறத்தகுந்த முருகப்பெருமான் திருமுன்னர்ச் சென்றனன்.

(வி - ம்.) வேழமூரிறை - இந்திரன். சோதி - இறைவன் ; சிவன். ஆய் - தாய். காயிலைப்படை : வினைத்தொகை. காய்தல் - சினத்தல். இலையையுடைய வேற்படை என்க. அண்ணல் - முருகன்.

(10)

 தாது துன்றிய வாச மாமலர் தமனி யச்செழு மாமலர்
 கோது பாறிய வச்சு தங்குரு மோலி வானவர் கொடியக
 மீது தாங்கினர் நிற்ப வள்ளிவி ழைந்து தாளிணை தூய்த்தொழு
 தியாது மன்பிலி யேற்கு மின்னரு ளேய்ந்த வாறென விம்மினான்.

(இ - ள்.) மகரந்தத்துகள் செறிந்த மணமிக்க சிறந்த மலர்களையும் பொன்னாலியன்ற செழித்த சிறந்த மலர்களையும் குற்றமகன்ற அரிசியையும் நிறமிக்க முடியினையுடைய தேவர்கள் பூந்தட்டின் மிசைப் பெய்து ஏந்தி நிற்ப, இந்திரன் அவற்றை அள்ளி விரும்பிப் பெருமானுடைய சேவடிகளிலே தூவித் தொழுது நின்று அம்மம்ம! சிறிதும் அன்பில்லாத எளியேனுக்கும் எம்பெருமானுடைய இனிய திருவருள் கிடைத்தபடி பெரிதும் மருட்கைத்தே என்று நெஞ்சம் விம்மா நின்றான்.

(வி - ம்.) தாது - பூந்துகள். தமனியம் - பொன். அச்சுதம் - அரிசி. கொடியகம் - பூந்தட்டு. யாதும் - சிறிதும்.

(11)

 இரண வல்லவு ணக்கு லத்தெறு ழாயன் கொன்றம ரம்பொர
 முரண விந்தொரு பற்று மின்றிமு டிந்த பாணியின் வந்தருள்
 கருணை யின்றிற நோக்கி யுள்ளங்க சிந்து நீடெதிர் நின்றவண்
 அருண மென்மலர் வென்ற பாதம கத்த ணிந்துபெ யர்ந்தனன்.