பக்கம் எண் :

90தணிகைப் புராணம்

 பேன வாரமுந் தவழ்ந்திட மிகுவளம்
           பிணைந்ததா லொருமாடு.

(இ - ள்.) காட்டின்கணுள்ள கோழிகள் வயலினிடத்தும் கடற்கரைச் சோலைகளிடத்தும் கலக்க, காவலோடு கூடிய மருத நிலத்தூர்களிலுள்ள மதத்தோடு கூடிய யானைகள் நெய்த னிலத்தூர்களிலும் நெருங்க, அலைகளோடு கூடிய கடலின்கணுள்ள வளைதலுள்ள சங்குகள் செழித்த நீரோடு கூடிய கால்வாய்களிலும் ஒலி நீங்காத கான்யாற்றி னிடத்தோடுகின்ற நுரையோடு கூடிய நீரினிடத்தும் ஊர்ந்து செல்ல மிகுந்த வளம் ஒருபக்கத்து நெருங்கியுளது.

(வி - ம்.) கான வாரணம் - கான்கோழி. கானல் - கடற் கரைச் சோலை. நல்லூர் - மருத நிலத்தூர். பாக்கம் - நெய்தனிலத்தூர். பாடி - முல்லை நிலத்தூர். கூன வாரணம் - வளைதலையுடைய சங்கம். குரைப்பு - ஒலி. பேனம் - நுரை. வாரம் - நீர். யானை - குறிஞ்சிக்குரிய கருப் பொருளாயினும் அரசர்க்குரிய சதுரங்கங்களி லொன்றாக இருத்தலால் "கடிநல்லூர்த் தானவாரணம்" என்றார்.

(168)

 வள்ளி மௌவனீள் வயலைதுப் பிலதைகண்
           மலர்விரி கணிகொன்றை
 கள்ள வஞ்சிநா கத்தினுட் டந்நிலக்
           கடிமர மொரீஇமூன்றும்
 நள்ள மீப்படர்ந் தொருவழிக் கோத்திர
           நண்ணினார் தமைநீவி
 ஒள்ளி யோர்ப்புணர் மாதர்போன் றுறுவள
           மொருமருங் குளதாமால்.

(இ - ள்.) குறிஞ்சி நிலத்தின்கண்ணுள்ள வள்ளிக் கொடியும், முல்லை நிலத்தின்கண்ணுள்ள முல்லைக் கொடியும் மருத நிலத்தின்கண்ணுள்ள நீண்ட வயலைக் கொடியும் நெய்த னிலத்தின்கணுள்ள பவளக் கொடியுமாகிய நான்கும், இந் நான்கு நிலக் கருப் பொருள்களாகிய மலர் விரியப் பெற்ற வேங்கை மரமும், கொன்றை மரமும், கள்ளைத் தன்னிடத்தேயுடைய வஞ்சி மரமும், சுரபுன்னை மரமுமாகிய நான்கனுள் அக் கொடிகள் தன் நிலக் கருப் பொருளாகிய மரத்தை நீக்கி ஏனை மூன்று நில மரங்களும் தன்னை நெருங்க அவைகளின்மீது படர்ந்து ஒரு குடியுட் பிறந்து தம்மை அணுகினாராகிய ஆடவரை விடுத்து (ஏனைய கோத்திரத்துப் பிறந்த) ஒள்ளியோராகிய அறிவுடையோர்களைப் புணர்கின்ற மாதர்களைப் போன்று பொருந்துகின்ற வளம் ஒரு பக்கம் உளதாம்.

(வி - ம்.) துப்பிலதை - பவளக்கொடி. மூன்றும் - தன்னில மரமொழிந்த ஏனை மூன்று நில மரங்கள். ஒள்ளியோர் - வேறு கோத்திரத்துட் பிறந்த அறிவாற் சிறந்த ஆடவர். தமது குடியிற் கொள்ளுதல் உலக வழக்கன்மையின் ஒருவழிக் கோத்திரம் நண்ணினார்தமை நீவி என்றார்.

(169)