பக்கம் எண் :

இராமன் அருள்பெறு படலம்903

இராமன் அருள்பெறு படலம்

 இல்லறத் திருப்பினுந் தணிகை யெம்பிரான்
 நல்லருட் குரியவர் நவையி னீங்கினார்
 வெல்லலர் வினைதுற வறத்தின் மேவினும்
 வல்லிதன் கேள்வனை மனத்துன் னார்களே.

(இ - ள்.) திருத்தணிகை மலையின்கண் எழுந்தருளியிருக்கும் எம்மையாளுடைய முருகப்பெருமானுடைய நல்ல திருவருட்குரிய அன்பர் இல்லறத்திலேயிருப்பினும் குற்றத்தினின்றும் நீங்கிச் சிறந்தோரேயாவர். துறவறத்திலே நிற்பினும் வள்ளி கொழுநனாகிய அப்பெருமானை நெஞ்சின் கண் நினையாதவர் இருவினைகளையும் வெல்லவியலாதவரே யாவர்.

(வி - ம்.) நவை - பிறவித்துன்பம். வல்லி - வள்ளியம்மையார். இச் செய்யுளில்.

 "ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே.
           மெய்யுணர் வில்லா தவர்க்கு"

(குறள் - 354)

என்னுந் திருக்குறட் கருத்துப் பொதியப்பட்டுளது.

(1)

 அறந்தலை யெடுத்திடு மயோத்தி மாநகர்
 சிறந்திடுந் தசரதச் செல்வத் தாதைவாய்ப்
 பிறந்தசொற் பிழைப்பதற் கஞ்சிப் பெய்கழல்
 மறந்தழை யிராமன்வார் வனத்துச் செல்லுநாள்.

(இ - ள்.) நல்லறம் ஓங்கித் தழைத்தற்கிடமான அயோத்திமா நகரத்தின்கண் சிறந்திருந்த செல்வமுடைய தசரதன் என்னும், தன் தந்தையின் திருவாயின்கட் டோன்றிய சொல் பொய்படுதற் கஞ்சிக்கட்டிய கழலையுடைய வீரம் மிகுந்த இராமன் நெடிய காட்டின்கண் செல்கின்ற அந்த நாளிலே.

(வி - ம்.) தலையெடுத்திடல் - ஓங்கிவளர்தல். தசதிசையினுஞ் செல்லும் ரதத்தையுடைய செல்வத் தாதை என்றவாறு. மறம் - வீரம். வார் - நெடிய.

(2)

 அரக்கர்பட் டிமைபுரிந் தஞ்சொற் சீதையைக்
 கரக்கவெங் கவலையங் கடலுட் டாழ்ந்துராய்ப்
 பரக்குமுந் நீர்க்கடல் பருகு மாதவன்
 இருக்கைபுக் கடித்துணை யிறைஞ்சிக் கூறினான்.

(இ - ள்.) அரக்கர் வஞ்சனை செய்து அழகிய மொழியினையுடைய சீதையைக் கவர்ந்து கொண்டுபோய் மறைத்துவிட்டமையானே துயரக்கடலினுள் மூழ்கிக் கரையை மோதிப் பரவாநின்ற மூன்று நீர்த்தொகுதி