பக்கம் எண் :

இராமன் அருள்பெறு படலம்907

வேறு

 விண்ணவ ருடல முழுவதும் பொடித்த
           வெண்பொடி யணிந்தரு ளிறையப்
 பண்ணவர் முழுது முறுப்பினு ளடங்கும்
           பசு மயம் பொடித்தவெண் ணீறு
 புண்ணியம் வளர்க்கு முயிர்க்கெலாந் தரிப்பப்
           புகன்றன னஃதிரண் டாகும்
 எண்ணுவை திகநீ றிலகிய சைவ
           நீறென விரண்டையுந் தெரிப்பாம்.

(இ - ள்.) அமரர் உடலம் அனைத்தையும் நீற்ற வெண்ணீற்றினைத் தனது திருமேனியின்கண் அணிந்துள்ள சிவபெருமான் அவ்வமரர் அனைவரும் தன் உறுப்பினுள்ளே அடங்கப்பெற்ற ஆவின் சாணகத்தை நீற்ற திருவெண்ணீற்றினை அறம் வளர்க்கு மியல்புடைய மானிடர் உயிர்க்கெல்லாம் உடலின்கண் அணியும்படி திருவாய்மலர்ந்துள்ளான். ஈண்டுக் கூறப்பட்ட திருநீறு இருவகைப்படும், அவையாவன - கருதாநின்ற வைதிகநீறு விளங்கிய சைவநீறு என்னுமிவையாம். இவ்விருவகை நீற்றினையும் இனிக் கூறுவேம் கேள்.

(வி - ம்.) பண்ணவர் - தேவர். பசுமயம் - ஆப்பி.

(13)

 உலகருக் குரிய மறைவழி வேட்கு
           மோங்கிய விரசையிற் பொடித்த
 இலகுவெண் ணீறு வைதிக பூதி
           யின்னது புத்தியே யளிக்கும்
 மலமறு சத்தி பதிந்தவர்க் குரித்தாய்
           வயங்குமா கமவழி தீக்கை
 நிலவுசெங் கனலிற் பொடித்தவெண் பூதி
           நிகரிலாச் சைவவெண் ணீறு.

(இ - ள்.) உலகியல் வாழ்வுடையோர்க்குரிய மறைவழியானே வேள்வி செய்யாநின்ற உயரிய ஓமகுண்டத்திலே நீற்றிய விளங்கும் வெண்ணீறு வைதிகநீறு
எனப்படும். இந்நீறு புத்தியொன்றனையே வழங்குவதாம், மலமறுதற்குக் காரணமான சத்திபதிந்தவர்க்குரியதாய் விளங்குஞ் சிவாகம முறைப்படி தீக்கை செய்தற்பொருட்டு வளர்த்து நிலவாநின்ற செந்தீயிற் பொடித்தநீறு சைவத் திருவெண்ணீறு எனப்படும்.

(வி - ம்.) வைதிகபூதி - வேதமுறைப்படி நீற்ற வெண்ணீறும் ஆகம முறைப்படி நீற்ற நீறு சைவ வெணீறுமாம் என்க.

(14)

 முத்தியே யன்றிப் புத்தியும் வெஃகின்
           முகிழ்க்குமாற் சைவவான் பூதி