பக்கம் எண் :

இராமன் அருள்பெறு படலம்909

 பெறலருங் கற்ப மாதிய தீக்கை
           பெற்றமந் திரத்தொடு மணிவோர்க்
 கிறுவது செல்லாப் பகைகளு மில்லை
           யெய்துறாப் பொருள்களு மில்லை
 உறுவலிப் பாச முழுவது முருக்கி
           யுயர்கதி யண்மைய தாகும்
 நெறியுளி தீக்கை பெற்றணிந் திறைவ
           னீள்கழல் வணங்குதி யென்னா.

(இ - ள்.) பெறுதற்கரிய கற்ப முதலான பூதிகளை (ஆசாரியன்பாற் றீக்கைபெற்ற) மந்திரத்துடனே தரிப்பவர்களுக்கு நசித்தல் செல்லாப் பகைகளுமில்லை. (அவர்கள்) அடையப்பெறாத பொருள்களுமில்லை. மிக்க வலியோடுகூடிய மலங்களை யெல்லாங் கெடுத்து உயர்ந்த வீட்டினை அண்மையுறச் செய்யும். (ஆதலால்) நீ முறைப்படி (ஆசாரியன்பாற்) றீக்கைபெற்று (அந்நீற்றினை) யணிந்து இறைவன் நீண்டதிருவடிகளை வணங்குவாய் என்று.

(வி - ம்.) ஆதிய : பலவறிசொல். இறுவது செல்லா : ஒரு சொன்னீர்மைத்து. உறு - மிகுதி. ஆகும் - ஆக்கும்.

(17)

 அருடகு தீக்கை புரிந்தெழுத் தைந்து
           மளித்தருந் தமிழ்முனி சொல்வான்
 இருளறு மினைய பூதிதீக் கையினெய்
           தாதசூத் திரர்க்கவர்க் கிழிந்தோர்க்
 கொருவுவ விறைவன் றிருமடைப் பள்ளி
           யொண்பொடி சூத்திரர்க் குரித்தாம்
 குரையழன் மேய்ந்த வனத்துவெண் ணீறு
           கோடலாந் தாழ்ந்துளோ ரெவர்க்கும்.

(இ - ள்.) அருளுடன்கூடிய தகுதியமைந்த நிருவாண தீக்கையை (இராமனுக்குச் செய்து) முத்தி பஞ்சாக்கரத்தை செவியறிவுறுத்து, அருளோடுகூடிய தமிழ்முனியாகிய அகத்தியர் சொல்வார். ஆணவ மலத்தை நீக்குகின்ற இத்தன்மையவாகிய நீறு தீக்கைபெறாத வேளாளர்க்கும் நான்காம் வருணத்திற் றாழ்ந்தோருக்கும் ஆகாதனவாம். இறைவன் திருமடைப் பள்ளியின்கண் ணுள்ள நீறு வேளாளர்க்குரித்தாகும். ஒலிக்கின்ற அழலால் உண்ணப்பட்ட வனத்தின்கண்ணுள்ள வெண்ணீறு தாழ்ந்துள்ளவர் யாவரும் கொள்ளுந் தகுதியுடையவாகும் என்க.

(வி - ம்.) தமிழ்முனி - அகத்தியன். இருள் - ஆணவமலம். பூதி - திருநீறு. ஒருவுவ -நீக்குவன. குரையழல் : வினைத்தொகை.

(18)

 மந்திரங் கேட்டி யரசனே சாத
           மயத்தினை யேற்றல்வா மத்தான்