பக்கம் எண் :

926தணிகைப் புராணம்

 அப்ப திக்கொரு சாரட லாழியான்
 ஒப்பி றன்மக ளோடுநீ யாட்டயர்
 வைப்பெ னக்கிரி யாய்வளர்ந் தல்கியாங்
 கொப்பெ ழிற்கிரி யொன்றிருக் கின்றதே.

(இ - ள்.) அத்திருப்பதியினொருபக்கத்து வலிமை பொருந்திய சக்கரப்படையையுடைய கண்ணன் (பிறர்) ஒப்பில்லாத தன் மகளாகிய வள்ளிநாயகியாருடன் (நீ) திருவிளையாட்டினைச் செய்கின்ற இடமெனக் (கண்டோர் கருதும் வண்ணம்) மலையாக வளர்ந்து தங்கினதுபோல தனக்குத்தானே உவமையாகிய மலையொன்றுள்ளது.

(வி - ம்.) ஆழியான் - திருமால். வைப்பு - இடம். ஒருசார் - ஒரு பக்கம். அல்கல் - தங்கல். கிரி - மலை.

(16)

 ஓங்கன் மாயனு டுத்தபொன் னாடையொத்
 தாங்கு மூடிக மங்கமழ் செம்பொனும்
 பாங்க ரூழ்த்துகு பன்மலர்த் தாதுவும்
 நீங்க லின்றி நிரந்ததவ் வான்வரை.

(இ - ள்.) மலை வடிவமாகிய விண்டு (இடையின்) அணிந்த பொன் ஆடையினை ஒத்து அவ்விடத்துப் பெருச்சாளிகள் தோண்டுதல் செய்து கொட்டுகின்ற பொற்கட்டிகளும் (மரங்கள்) பதனழிதலாற் பக்கத்தே கொட்டுகின்ற பல மலர்ப்பொடிகளும் அப்பெரிய மலையானது நீங்குதலின்றிக் கலந்துள்ளதென்க.

(வி - ம்.) ஊழ்த்தல் - பதனழிதல். நிரந்தன - கலந்தன.

(17)

 ஐய நீகணி யாவது தேர்ந்தென
 உய்தி பெற்றன மென்றுறு மோகையால்
 மெய்ம லிந்தன போன்றன வேங்கைகள்
 கொய்ம லர்த்திரள் கொண்டுத ழைத்தன.

(இ - ள்.) ஐயனே நீ வேங்கைமர மாதலைத் தெளிந்து யாம் பிழைத்தோமென்று கூறிப் பொருந்துகின்ற உவகையான் வேங்கை மரங்கள் பறிக்கத்தக்க மலர்களைத் தன்பாற்கொண்டு செழித்திருத்தல் உடல் புளகமுற்றிருத்தலை யொத்த வென்க.

(வி - ம்.) கணி - வேங்கைமரம். தேர்ந்தென : தேர்ந்து, எச்சத்திரிபு. ஓகை - உவகை. கொய்மலர் : வினைத்தொகை.

(18)

 நின்னு ளங்களி கொள்ளு நெடுமயில்
 தன்னி னங்கட ளிப்பது செய்குவான்
 பொன்ன கர்க்கிறை யேவப்பு ணர்ந்தென
 மின்னு குத்துமு ழங்குவ மேகமே.

(இ - ள்.) ஐயனே நினது திருவுள்ளம் களிப்புக்கொளற் கேதுவாகிய மயிற்பறவையின் இனங்களாகிய மயிற்குலங்கள் தளித்தலைச்