பக்கம் எண் :

திருநகரப் படலம்93

(வி - ம்.) முதலெழுத்து - ஏழாவதன்றொகை. ஆடல் - விளையாடல். புகன்றிடான் - விரும்பான். முற்றாங்கி - முதன்மையாக மேற்கொண்டு. படைப்புழி - (பிரமனைச் சிறையிலிட்டுப்) படைக்குங் காலத்து.

(2)

 குண்டு கண்ணபேழ் வாயின வீங்கிய
           குடவயிற் றினபூதம்
 மிண்டு தேவர்க டலைக்கல னராத்தொடை
           வியன்புயக் கணநாதர்
 மண்டு வெள்ளியங் குன்றுமொவ் வாதெனின்
           மழவிளங் கதிர்கோடி
 கொண்ட மேனியி னமரர்சூ ழித்திருத்
           குன்றமொப் பதுமுண்டே.

(இ - ள்.) ஆழமாகிய கண்ணை யுடையனவும், அகன்ற வாயினையுடையனவும், பெருத்த குடம் போன்ற வயிற்றை யுடையனவுமாகிய பூதங்களும், வலியோடு கூடிய (பிரம விட்டுணுவாகிய) தேவர்களின் தலைமாலையாகிய ஆபரணங்களையும், பாம்பாகிய மாலையையு மணிந்த புயத்தோடு கூடிய கணத்தலைவர்களும், நெருங்கிய வெள்ளியங் குன்றும் கோடிக் கணக்காகிய இளஞ் சூரியர் ஒளியைத் தன்னிடத்தே கொண்ட மேனியை யுடைய தேவர்கள் வலஞ்செய்கின்ற இத்த ணிகைமலைக்கு ஒப்பாகா தென்றால்; ஒப்பாவதாகிய வேறு மலையுமுள்ளதோ? இல்லை.

(வி - ம்.) கண்ண, வாயின, வயிற்றின பூதம் எனக் கூட்டுக.

(3)

 சங்க மேந்திய தலைவனும் பிரமனுஞ்
           சதமகத் திறையோனும்
 பொங்கு தந்நக ரொழிவள முழுவதும்
           புகுந்துபோற் றுபுவாங்கி
 அங்கண் வைகினர் வாழலுற் றாரெனி
           லறுமுக னரசாளும்
 நங்கள் காவியங் கிரிவள மொன்றொடு
           நாட்டவும் படுமேயோ.

(இ - ள்.) பாஞ்சசந்ய மென்னும் சங்கினைக் கையிற் றாங்கிய விண்டுவும், பிரமனும் நூறு யாகங்களைச் செய்து தலைமைபெற்ற இந்திரனும், (எல்லா வளங்களும்) மிகுந்த தங்கள் நகரங்களாகிய வைகுந்தம், சத்தியலோகம், அமராவதி முதலிய நகரங்களின் கண்ணிலவாகிய செல்வங்க ளெல்லாவற்றையும், (தணிகையில்) வந்து (முருகக் கடவுளைத்) துதித்து வாங்கி அவ்வவ் வுலகங்களில் தங்கினவர்களாகி வாழ்தலுற்றன ரென்றால், அறுமுகக் கடவுள் (வீற்றிருந்து) அரசாட்சி செய்கின்ற நமது காவிமலையின் வளப்பமானது வேறொரு பொருளோடு உவமையாக நிலைநிறுத்துச் சொல்லப்படுமோ?