மேலதன்றிப் புதிதாகத் தாம்வேண்டியவாற்றால் தொடுக்கப்படுந் தொடர் நிலைமேலது" என்று கூறினமையின். இந்தக்கலம்பகம், அங்ஙனங்கூறிய விருந்தா மென்று உணர்க. அச்சூத்திரவுரையில் அந்தாதியும் கலம்பகமும் முதலாயின உதாரணங்காட்டப்பட்டுள்ளவாறுங் காண்க. இனி, இதனைச் சிறுகாப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார். இப்பிரபந்தம், தோத்திர ரூபமானது. நூலின் புறமாக முதலிற்கூறிய சிறப்புப்பாயிரச்செய்யு ளிரண்டும், காப்புச்செய்யுள் நான்கும், நூலின்இறுதியிற்கூறும் தற்சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றும் நீங்கலாக நூறுசெய்யு ளுடையது, இந்நூல். தலத்தின் பெயர் - ரங்கம், ஸ்ரீரங்கம், திருவரங்கம், பெரியகோயில் கோயில் என்பன. பூலோகவைகுண்டம், போகமண்டபம், ஸ்வயம்வ்யக்த க்ஷேத்ரம் என்பவை, விசேஷநாமங்களாம். இது, ஸ்வயம்வயக்தக்ஷேத்ரம் எட்டில் ஒன்று. இத்திருப்பதியின் எம்பெருமானது திருநாமம் - ஸ்ரீரங்கநாதன், பெரியபெருமாள், நம்பெருமாள், அழகியமணவாளன். கோலம் - பள்ளிகொண்ட திருக்கோலம்; சேஷசயனம். சந்நிதி - தெற்குநோக்கியது. நாச்சியார் - ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கநாச்சியார். விமானம் - பிரணவாகாரவிமானம், வேதசிருங்கம். நதி - உபயகாவேரி (தென்திருக்காவேரியும், வடதிருக்காவேரியும் [கொள்ளடம்.]) தீர்த்தம் - சந்திரபுஷ்கரிணி முதலிய நவதீர்த்தங்கள். தலவிருக்ஷம் - புன்னைமரம். பிரதியக்ஷம் - தர்மவர்மா, ரவிதர்மன், சந்திரன், காவேரி முதலான வர்களுக்குப் பிரதியக்ஷம். பாடல் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழி சையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என்கிற ஆழ்வார்கள் பதின்மர், ஆண்டாள் இவர்கள் மங்களாசாஸநம். பஞ்சகாவியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் இந்தத்திவ்விய தேசமும் இதிலெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானும் "நீலமேக நெடும்பொற் குன்றத்துப், பால்விரிந் தகலாது படிந்தது போல, ஆயிரம் விரித்தெழு தலையுடை யருந்திறற், பாயற் பள்ளிப் பலர் தொழுதேத்த, விரிதிரைக்காவிரி வியன்பெருந் துருத்தி, திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்.......... என் கண் காட்டென் றென்னுளங் கவற்ற, வந்தேன்" என்று பாராட்டிக்கூறப் பட்டிருத்தலுங் காண்க. |