பக்கம் எண் :

திருவேங்கடமாலை455

"கொங்கை யென்று வீறு மருப்பிணை" என்பதற்கு - கொங்கையாகிய யானைத்தந்த மென்றும், "கண்ணென்று வீறுமருப்பிணை" என்பதற்கு - கண் பார்வையாகிய பெண்மான் பார்வை யென்றும் உருவகமாகக் கருத்துக் கொள்க; அன்றி, கொங்கைபோன்று யானைத் தந்தமும், கண்போன்று பெண்மான்விழியும் பொருந்திய என, எதிர்நிலையுவமையாகக் கருத்துக் கொள்ளினுமாம். கிளி - அதன்சொல்லுக்கும், பிணை - அதன் நோக்கத்துக் கும் முதலாகுபெயர். மரு - மருவு என்பதன் விகாரம். பிணை - பெண்மைப் பெயர். துளவம் - துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு. திருத்துழாய் மலர் மாலை, திருமாலுக்கு உரியது. துளவமலர்க்கண்ணி - துளவினாலும் மலர் களினாலுமாகிய மாலையுமாம். "தமக்கு" என்பதை மத்திமதீபமாக "தொண்டாய்" என்பதனோடுங் கூட்டுக. உள = உள்ள: தொகுத்தல். ந + மலம் + அர் - அமலர்; பரிசுத்தர்; வடமொழிச்சந்தி. அண்ணியார் - அண்என்னும் வினைப் பகுதியினடியாப் பிறந்த இறந்தகாலவினையாலணையும்பெயர்: "இன்" என்ற இடைநிலை ஈறுதொக்கது. அன்போடு தமக்குத் தொண்டுபூண்ட தூயோரது உள்ளத்தில் உவந்து வந்தெழுந்தருளி யிருத்தலுமன்றி, அவர்கட்குக் கட்புலனாய் அருகில் தோன்றி நின்று ஆவனசெய்தலு முடையரென்பது, "தொண்டாய்த் தமக்கன்புள வமலர்க் கண்ணியார்" என்பதன் கருத்து.

(42)

63.மாதரம்பொன் மேனி வடிவு மவர்குறங்கு
மீதரம்பை யைப்பழிக்கும் வேங்கடமே - பூதமைந்தின்
பம்பரமா காயத்தார் பாடினால் வீடருளு
நம்பரமா காயத்தார் நாடு.

(இ - ள்.) மாதர் - மகளிரது, அம் பொன் மேனி வடிவும் - அழகிய பொன்னிறமான உடம்பின் தோற்றமும், மீது அரம்பையை பழிக்கும் - மேலுலகத்திலுள்ள ரம்பை யென்னுந் தேவமாதை இழிவு படுத்தப்பெற்ற: அவர் குறங்கும் - அம்மகளிரது தொடையும், மீது அரம்பையை பழிக்கும் - மேன்மையுள்ள (செழித்த) வாழைத்தண்டை வெல்லப்பெற்ற: வேங்கடமே -,- பூதம் ஐந்தின் - பஞ்சபூதங்களினாலாகிய, பம்பரம் - சுழல்கிற பம்பரம் போல விரைவில் நிலைமாறுவதான, மா காயத்தார் - பெரிய உடம்பையுடைய சனங்கள், பாடினால் - துதித்தால், வீடு அருளும் - (அவர்கட்கு) முத்தியை அளிக்கின்ற, நம் பரம ஆகாயத்தார் - நமது தலைவரும் பரமாகாசமெனப்படுகின்ற பரமபதத்தை யுடையவருமான திருமாலினது, நாடு - ஊர்; (எ - று.)

திருவேங்கடமலையில் வாழும் மகளிர் அரம்பை யென்னும் தேவமாதினும் மேம்பட்ட வடிவழகையும், வாழைமரத்தண்டினும் அழகிதாகத்திரண்டு உருண்டு நெய்ப்பமைந்த தொடையையும் உடைய ரென்றவாறு. மாதர் - விரும்பப்படும் அழகுடையோர். அரம்பை யென்பது - இருபொருளிலும் ரம்பா என்ற வடசொல்லின் விகாரம். பழிக்கும் என்பது - உவமையுருபுமாம். பூதம் ஐந்து - நிலம், நீர், தீ, காற்று, வானம். காயம், பரமாகாசம் - வடசொற்கள். மாகாயம் - ஸ்தூலசரீரம். வீடு - (பற்றுக்களை) விட்டு