பக்கம் எண் :

அழகரந்தாதி621

இல்லாதவனென்னும் பொருளோடு, தனக்குச் சரீரமாக அமைகின்ற சராசரங்களின் வினைத்தொடர்பு ஒன்றும் தன்னிடம் பொருந்தப்பெறாதவனென்ற கருத்தையுங் கொண்டது. திருமகள் - செல்வத்துக்குஉரிய தலைவி; பெரியபிராட்டியா ரென்பது, இவளுக்குச் சம்பிரதாயத்திருநாமம், கேள்வன் - கேண்மையென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்; வ் - பெயரிடை நிலை; உறவும் நண்பும் அன்பு முடையவ னென்பது, இதன் பொருள். கருடன் எல்லாப்பறவைகட்கும் அரசனாவதோடு வேதஸ்வரூபியும் பரமபதத்து நித்யசூரிகளில் ஒருவரு மாதலால், 'தெய்வப்புள் என்று சிறப்பித்துக்கூறினார். பெரியதிருவடி என்பது, இவரது சம்பிரதாயநாமம். 'தெய்வப்புள்ஊர் கூராழி மாயன்' என்ற சொற்சேர்த்தி "ஆனையின்துயரந்தீரப் புள்ளூர்ந்துசென்றுநின் றாழிதொட்டானை" என்றபடி அதிவிரைவாகக் கருடன்மீதுவந்து சக்கராயுதத்தையேவி முதலையைத் துணித்துக் கஜேந்திராழ்வானைப் பாதுகாத்த வரலாற்றை ஞாபிக்கும். இது, ஆபத்காலத்தில் அடியார்களைத் துயர்தீர்த்துப்பாதுகாத்தற்கு உரிய சிறந்த உபகரணங்களையும் திறமையையும் உடையவனென்பதைக் காட்டும். கொற்றம் - (பகைவரைக்) கொன்று அடைவது என வெற்றிக்குக் காரணக்குறி. சூரியனுக்கு வெற்றி - எங்கும் இருளை இருந்ததுதெரியாதபடி ஒழித்தல். வெய்யோன் - வெம்மையையுடையவன்; உஷ்ணகிரணன். சூரியனதுதேர் ஸம்வத்ஸரரூபமான ஒற்றைச்சக்கரத்தையுடைய தென்று புராணம் கூறும்.

எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக்கூறவேண்டுவது மரபாதலால், "நீர்" என்று தொடங்கினார்; "சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள், கார் மலை சொல் எழுத்துக் கங்கை நீர் கடல் பூத் தேர் பொன், ஏருறு மிவை மூவாறும் இதன்பரியாயப்பேரும், ஆருமங்கலச்சொல் செய்யு ளாய்ந்து முன்வைக்க நன்றாம்"என்பதுகாண்க.

(1)

2.உரைமாற்றமுண்டென்பொறியைந்துமுன்னிடத்தன்றியுண்ணு
மிரைமாற்றவேண்டுமிதுவேயென்விண்ணப்ப மென்னப்பனே
யுரைமாற்றளவற்றபொன்னுடுத்தாய் வில்லெடுத்திலங்கை
வரைமாற்றலரைச்செற்றா யழகா கருமாணிக்கமே.

(இ - ள்.) என் அப்பனே - எனது ஸ்வாமீ! உரை மாற்று அளவு அற்ற பொன் உடுத்தாய் - உரைகல்லிலே உரைத்து நோக்கியுணரத்தக்க மாற்றின் அளவுகடந்த (மிகச்சிறந்த) பொன்மயமான ஆடையை (பீதாம்பரத்தை) உடுத்துக்கொண்டுள்ளவனே! வில் எடுத்து இலங்கை வரை மாற்றலரை செற்றாய் - கோதண்டத்தைக் கையிலேந்தி (அதுகொண்டு அம்புதொடுத்துப் பொருது) இலங்காபுரியிலுள்ள மலைபோலும் வலிய பகைவர்களான இராவணாதி ராக்ஷசர்களை அழித்திட்டவனே! அழகா - அழகனே! கரு மாணிக்கமே - கருநிறமுடையதொரு மாணிக்கம் இருந்தால் அதுபோன்ற நிறத்தையும் ஒளியையுமுடையவனே! - உரை மாற்றம் உண்டு - (அடியேன் உன்பக்கல்) சொல்லுஞ்சொல் (ஒன்று) உளது; (அது யாதெனில், -) என்பொறி ஐந்தும் உன்னிடத்து அன்றி உண்ணும் இரை மாற்ற வேண்டும்.