பக்கம் எண் :

890சீரங்கநாயகரூசல்

21.சந்தாடும்பொழிற்பூதூர்முக்கோற்செல்வன்
        றன்மருகனாகியிருதாளுமான
கந்தாடைக்குலதீபன்முதலியாண்டான்
        கடன்ஞாலந்திருத்தியருள்கருணைபாடக்
கொந்தாருந்துளவாடச்சிறைவண்டாடக்
        குழலாடவிழியாடக்குழைக்காதாட
நந்தாடக்கதையாடத்திகிரியாட
        நன்மாடத்திருவரங்கராடிரூசல்.

(இ - ள்.) சந்து ஆடும் பொழில் - அழகுநிறைந்த சோலைகளையுடைய, பூதூர் - ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்த, முக்கோல் செல்வன்தன் - திரிதண்டத்தை யேந்திய உடையவரது, மருகன் ஆகி - மருமகனாய், இரு தாளும் ஆன - (அவரது) இரண்டு திருவடிநிலைகளுமாகிய, கந்தாடை குலம் தீபன் முதலியாண்டான் - கந்தாடைக்குலத்திற்கு விளக்குப்போன்ற முதலியாண்டான், கடல் ஞாலம் திருத்திஅருள் - கடலினாற் சூழப்பெற்ற நிலவுலகத்தி லுள்ளாரை (வைஷ்ணவராகுமாறு) சீர்திருத்தியருளிய, கருணை - கிருபாவிசேஷத்தை, பாட - (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, - கொந்து ஆரும் துளவு ஆட - கொத்துக்கொத்தாக நிரம்பிய திருத்துழாய்மாலை அசையவும், சிறை வண்டு ஆட - (அந்தத்திருத்துழாய்மாலையில் மொய்க்கின்ற) சிறகுகளையுடைய வண்டுகள் அசையவும், குழல் ஆட - (அத்திருத்துழாய்மாலையைச்சூடிய) திருக்குழற்கற்றை அசையவும், விழி ஆட - திருக்கண்கள் அசையவும், குழை காது ஆட - குண்டலமணிந்த திருச்செவிகள் அசையவும், நந்து ஆட - (இடப்பால் மேல்திருக்கையிலேந்திய பாஞ்சசந்யமென்னுஞ்) சங்கு அசையவும், கதை ஆட - (இடப்பாற்கீழ்க்கரத்திலேந்திய கௌமோததீயென்னுங்) கதாயுதம் அசையவும், திகிரிஆட - (வலப்பால் மேல்கரத்தில் தரித்துள்ள சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதம் அசையவும், நல் மாடம் திருவரங்கர் - அழகிய மாளிகைகள் நிறைந்த ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியிருப்பவரே! ஊசல் ஆடிர் -; (எ - று.)

எம்பெருமானாரது திருவடிநிலைகளை முதலியாண்டானென்று வழங்குவது, சம்பிரதாயம். மருகன் - உடன்பிறந்தாள் குமாரன்.

(21)

22.திருக்கலியனணுக்கர்திருப்பணிசெய்யன்பர்
        சீரங்கநான்மறையோருள்ளூர்ச்செல்வர்
தருக்குமிசைப்பிரான்மார்பாரளந்தார்பாதந்
        தாங்குவோர்திருக்கரகந்தரித்துநிற்போ
ரிருக்குமுதல்விண்ணப்பஞ்செய்வோர்வீரர்க்
        கிறையவர்கள்சீபுண்டரீகர்மற்றும்
பெருக்கமுள்ளபரிகரங்கடொழுதாட்செய்யப்
        பிரமமாந்திருவரங்கராடிரூசல்.