பக்கம் எண் :

இயல் இருபத்தொன்று  
  
 பலவகை

288.

அற்ப சுகத்தை இழப்பதால் பெரிய இன்பத்தைக் காணலாம் எனின், ஞானி அற்ப சுகத்தைக் கைவிட்டு பெரிய இன்பத்தை நாடுவானாக.

(1)
 
  
289.

பிறரைத் துன்புறுத்தித் தான் இன்பமடைய விரும்புவோன், துவேஷத் தளைகளில் சிக்குண்டு, துவேஷத்திலிருந்து விடுபடுவதில்லை.

(2)
 
  
290.

செய்யத் தக்கதைக் கைவிட்டு, தகாததைச் செய்தால் கட்டுக்கடங்காத அத்தகைய கருத்தற்றவர்களின் ஆஸவங்கள் வளர்ந்துகொண்டேயிருக்கும்.

(3)
 
  
291.

எவர்கள் உடலின் இயல்பை உணர்ந்து மனத்தில் எப்போதும் கவனமாயிருந்து, செய்யத் தகாதவைகளை விலக்கி, செய்யத் தக்கவைகளையே செய்து வருகிறார்களோ,அத்தகைய கருத்துடைய அறிவாளரின் ஆஸவங்கள் அழிந்தொழிகின்றன.

(4)
 
  
292.

உண்மையான பிராமணன் ஒருவன், தன் தாயையும், தந்தையையும், க்ஷத்திரிய மன்னர் இருவரையும் கொன்றிருந்த போதிலும், குடிகளோடு ஓர் இராஜ்யத்தையே அழித்திருந்த போதிலும், அவன் பாவமற்றவனாவான்1.

(5)

 


1உண்மையான பிராமணன் இத்தகைய பாவம் எதையும் செய்ய மாட்டான் என்பது கருத்து. இவ்வாறே அடுத்த சூத்திரத்தையும் கொள்ள வேண்டும்.

புத்தபகவர், தம் காலத்தில் வழங்கிய கதைகள், புராணங்கள். சாஸ்திரங்களிலிருந்து சில சிறப்புப் பெயர்களையும், சொற்களையும், கதைகளையும் எடுத்துக் கையாள்வது உண்டு. ஆனால், அவருடைய கருத்துக்களில் வேற்றுமையிருக்கும். பிரம்மா, தேவர்கள், சுவர்க்கம், நரகம் முதலிய சொற்களை அவர் உபயோகித்திருக்கிறார். சாதாரண மக்களுக்குத் தம் கருத்துக்களைஎளிதாகக் கூறுவதற்காகவே அவர் இவைகளைக் கையாண்டிருக்கிறார். உலகங்கள் யாவையும் படைத்தஒரு பிரம்மாவைப் பற்றியோ, தேவர்களைப் பற்றியோஅவர் நம்புவதுமில்லை; ஆராய்வதுமில்லை. இவை போன்ற ஒரு சொல்லே 'பிராமணர்' என்பதும், சில இடங்களில் புத்தர் பிக்குகளைப் பிராமணர் என்று கூறுவதுண்டு. பிராமண குலத்தில் பிறந்தவரை அவர் குறிப்பிடவில்லை. உண்மையான பிராமணர் எவர்கள் என்று அவர் விளக்கி யுரைத்திருப்பதை இந்நூலிலே26-வது இயலில் காணலாம். அவர் கருத்துப்படிபிராமணராயிருப்போர் ஈ, எறும்புக்குக் கூட ஹிம்சை செய்யமாட்டார்.

இந்த 5, 6- சூத்திரங்களுக்குத் 'தாய்' என்பது அவா,தந்தை என்பது 'அகங்காரம்' என்ற முறையில் விசேடஉரைகள் கூறுவதுண்டு. இப்படியெல்லாம் மறைபொருளாகக் கூறித் திகைக்க வைக்கும் முறை புத்தரிடம் அரிது.

பழைய ஹிந்துமத நூல்கள் சிலவற்றில், பிராமணன் கொலை செய்தால் பாவமில்லை என்று கூறியிருப்பதற்கும், புத்தர் கூற்றுக்கும் துளியும் சம்பந்தமிருக்க முடியாது. பௌத்த தருமத்தின்படி ஒவ்வொருவனும் தன் சிந்தனைக்கும், செயலுக்கும் தானே பொறுப்புள்ளவன். பாவ மன்னிப்பு என்பதே கிடையாது. ஒவ்வொருவனுடைய பாவத்தையும் அவனே அனுபவித்துத் தீரவேண்டும்.