இராமன் தன் நண்பர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது பறவைகளின் ஓசையை அடக்கிய பல விழுதுகளையுடைய ஆலமரம். ’’ இராமன் இலங்கைக்குப் போகும்போது தனுக்கோடியில் ஒரு ஆலமரத்தின் கீழ்த் தங்கினான். வானர வீரர்களுடன் அமர்ந்து இலங்கையைப்பற்றிய செய்திகளை ஆலோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவ்வால மரத்தின் மேலிருந்த பறவைகள் கூச்சலிட்டன. அந்தக் கூச்சலை அடக்கியபின் ஆலோசனை புரிந்தனர். இந்த இராமாயணக் கதையை இவ்வடிகள் நினைப்பூட்டுகின்றன. இராமாயணத்தில் உள்ள சிறு நிகழ்ச்சிகள்கூட தமிழகத்திலே பரவியிருந்தன என்பதை இதனால் அறியலாம். ‘‘முதியர்ப்பேணிய உதியஞ் சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை; (பா. 233) தன் முன்னோரின் வீரத்தையும், கொடையையும், பேணிப் பாதுகாத்த உதியஞ் சேரலாதன், பாரத யுத்தத்திலே இருபக்கத்துப் படைகளுக்கும் நிறைய சோறு போட்டகாலத்தில்’’ இது பாரதப் போரையும், பாரதப் போரிலே இரு பக்கத்துப் படைகளுக்கும் சோறிட்ட சேரமான் பெருஞ்சோற்று உதியலாதனையும் குறித்தது. திருவேங்கடம் திருவேங்கடம் என்னும் திருப்பதி மலையே பண்டைத் தமிழகத்தின் வடவெல்லை. பண்டைத்தமிழ் நூல்கள் எல்லாவற்றிலும் இதைக் காணலாம். அகநானூற்றுப் பாடல்கள் பலவற்றிலே வேங்கடத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வேங்கடத்திற்கு அப்பால் உள்ள நாடு வேற்றுமொழி வழங்கும்நாடு. அங்கு வாழ்வோர் வடுகர். அவர்கள் |