பக்கம் எண் :

முல்லைப்பாட்டு 105

தாயர்கள் கேட்டனர். உடனே மகிழ்ச்சியுடன் திரும்பி வந்து “நாங்கள் நன்மொழி கேட்டு வந்தோம். போருக்குப் போன உன் காதலன் வெற்றியுடன் விரைந்து வருவான். பகைவர்களிடம் திறைபெற்றுத் திரும்பி வருவான். நீ வருந்தாமலிரு” என்று கூறினர்.

அருங்கடி மூதூர் மருங்கிற்போகி
யாழிசை இன வண்டார்ப்ப நெல்லொடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
அரும் பவிழ் அலரி தூஉய்க்கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்தகையள், கைய
கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர், என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம். அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள், தெவ்வர்
முனை கவர்ந்துகொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர் வாய்வது, நீ நின்
பருவரல் எவ்வம் களை மாயோய்!’            (7-21)

இவ்வடிகளால் மேலே காட்டிய நிகழ்ச்சியைக் காணலாம். இவ்வாறு நற்சொல் கேட்டலை “விரிச்சி” என்று கூறும் தொல்காப்பியம்.

யானைப்பாகர்கள்

யானைப்பாகர்கள், யானையை அடக்கப் பயன்படுத்தும் பரிபாஷைகள் வடமொழிச் சொற்கள். அந்த வடமொழி சொற்களை அவர்கள் படித்துத் தெரிந்து கொண்டவர்கள் அல்லர். செவியாரலாகக் கேட்டுத் தெரிந்துகொண்டவை.