பக்கம் எண் :

156பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

இவ்வாறு செவிலித் தாயிடம் தோழி கூறினாள். இதுதான் இப்பாட்டிலே காணப்படும் நிகழ்ச்சி. இவ்விதம் சொல்லிச் செல்வதே இந்நூலின் அமைப்பாகும்.

தெய்வ நம்பிக்கை

சங்க காலத்திலே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கை குடிகொண்டிருந்தது. நோய் நீங்கத் தெய்வத்தை வேண்டிக் கொள்வார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவேன் என்று தெய்வத்தின் முன்னே ஆணையிடுவார்கள். மலர்களையும் வாசனைப் பொருள்களையும் கொண்டு தெய்வத்தை வணங்குவார்கள்.

"பிரார்த்தனை செய்தும், வணங்கியும் பல மலர்களைச் சிந்தியும், பல்வேறு உருவங்களுடன் விளங்குகின்ற கடவுளை வேண்டுகின்றாய். தூபங்காட்டியும் வாசனைப் பொருள்களைப் போட்டும் துன்பமடைந்து இவள் நோய் இன்னதென்று தெரியாமல் திகைக்கின்றாய்"

பரவியும், தொழுதும், விரவு மலர்தூயும்,
வேறுபல் உருவின் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று
எய்யா மையலை நீயும் வருத்துதி;                 (5 - 8)

இவ்வடிகளால் தெய்வத்தை வணங்கிப் பிரார்த்திக்கும் வழக்கத்தைக் காணலாம்.

காதல் கொண்ட தலைவன் காதலியிடம் "நான் உன்னை மணந்து இல்லறம் நடத்துவேன்" என்ற உறுதி கூறுகின்றான். அப்பொழுது அவன் "மலையின் மேல் உள்ள கடவுளை வாழ்த்தி வணங்குகின்றான்." "தலைவன் இப்பொழுது நம்மை விட்டுப் பிரிவான்" என்று எண்ணித் தலைவி வருந்தும்படி அவளுக்கு உறுதிமொழி உரைத்தான்.