பக்கம் எண் :

172பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

தென்கடல்முத்தும் குணகடல் துகிரும்

தெற்குக் கடலிலே விளைந்த முத்துக்கள்; கீழைக்கடலிலே தோன்றிய பவழங்கள்.

கங்கை வாரியும் காவிரிப்பயனும்

கங்கைநதி பாயும் நிலங்களிலே விளைந்த செல்வங்கள்; காவிரியாற்றுப் பாய்ச்சலால் விளைந்த செல்வங்கள்.

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

இலங்கையிலிருந்து வந்த உணவுப்பொருள்கள்; பர்மாவிலிருந்து வந்த பலவகையான செல்வங்கள்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு

இன்னும் பல அருமையான பண்டங்களும் மிகுதியான பண்டங்களும் பூமி தாங்க முடியாமல் நிறைந்து, செல்வங்கள் செழித்துக் கிடக்கின்ற பெரிய வீதிகள்.

இவ்வாறு காவிரிப்பூம்பட்டினத்து வீதிகளிலே குவிந்து கிடக்கும் செல்வங்களைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிகள் 185-193 வரையில் உள்ளவை.

வணிகர் நேர்மை

காவிரிப்பூம் பட்டினத்திலே வாழ்ந்த வணிகர்கள் மிகவும் நேர்மையுள்ளவர்கள். பிறர் பொருளைப் பறிக்க வேண்டும் என்ற பேராசையில்லாதவர்கள். நடுநிலையிலே நின்று வியாபாரம் செய்பவர்கள். அவர்கள் விற்பனை செய்யும் பண்டங்களின் கொள்முதல் விலையையும், இலாபத்தையும் வெளிப்படையாகக் கூறுவார்கள். இவ்வாறு காவிரிப்பூம்பட்டினத்து வணிகர்களின் பெருமையைக் கூறித் தமிழ்நாட்டு வணிகர்களின் உயர்வை விளக்கியிருக்கின்றார்.