பக்கம் எண் :

176பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

மலர் அணிந்த கோயில் வாசலிலே பலரும் தொழும்படி தெய்வத்தை, ஆவா கனம் செய்து கொடியேற்றப்பட்டிருக்கின்றது.

மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர்தொழு கொடியும்          (159--160)

இது எப்பொழுதும் கோயிலில் கட்டப்பட்டுப் பறந்து கொண்டிருக்கும் கொடி.

திருவிழாக்களைத் தெரிவிப்பதற்காக அரிசிப் பலியிட்டு வணங்கி, நீண்ட மரச் சட்டங்களில் கொடியைக் கட்டி உயரத்திலே பறக்கும்படி நாட்டியிருக்கின்றனர். அவை வெள்ளைத் துணியாலான கொடிகள்; கரும்பு பூத்தது போலக் காணப்படுகின்றன. நெருக்கமாகவும் பறந்து கொண்டிருக்கின்றன.

வருபுனல் தந்த வெண்மணல் கான்யாற்று
உருகெழு கரும்பின் ஒண்பூப் போலக்
கூழுடைக் கொடு மஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து
வால் அரிசிப் பலி சிதறிப்
பாகு உகுத்த பசு மெழுக்கில்,
காழ் ஊன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற் கொடியும்                 (161--168)

இவை திருவிழாவுக்கு ஏற்றப்பட்டிருக்கும் கொடிகளாகும்.

கல்வி கேள்விகளிலே வல்லவர்கள்; முன்னையோர் முறையினின்றும் வழுவாதவர்கள்; நல்ல ஆசிரியர்கள்; "நாங்கள் எதையும் விவாதிக்க வல்லோம். உண்மையை நிலை நாட்டப் பின்வாங்க மாட்டோம். எவரும் எங்களுடன் வழங்கிடலாம்" என்பதை அறிவிக்கக் கொடிகளை நாட்டியிருக்கின்றனர்; பட்டிமன்றங்களிலே இக்கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன.