பக்கம் எண் :

30பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

தெய்வங்கள்

திருமால், பரமசிவன், இந்திரன், பிரம்மன் முதலிய தெய்வங்களை இந்நூலிலே காணலாம்.

"பாம்பு இறக்கும்படி கொல்லுகின்ற புள்; பலகோடுகளையுடைய சிறகுள்ள புள்; இத்தகைய கருடப்புள்ளைக் கொடியாக உயர்த்தவர் திருமால்.

பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள் அணி நீள்கொடிச் செல்வன்"

என்பது திருமாலைக் குறித்துவரும் அடிகள்.        (150--151)

"வெண்மையான காளைஉரு எழுதிய கொடியை வலப்பக்கத்தில் உயர்த்தியவன்; பலரும் புகழும் வலிமையான தோளை உடையவன்; இடப்பாகத்தில் உமையை வைத்துக்கொண்டிருப்பவன்; இமையாத மூன்று கண்களை உடையவன்; திரிபுரத்தை அழித்த வலிமை உடையவன்.

வெள்ளேறு
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையாமுக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்'

இது சிவபெருமானைக் குறிக்கும் அடிகள்.              (151--154)

"ஆயிரங்கண்களை உடையவன்; நூறு என்னும் பல வேள்விகளைச் செய்தவன்; பகைவர்களைக் கொன்றழித்து வெற்றிபெறக்கூடியது-நான்கு தந்தங்களை உடையது-அழகிய நடையை உடையது-தொங்குகின்ற பெரிய கையை உடையது-ஆகிய யானையின் பிடரியிலே உயர்த்தியிருக்கின்ற அம்பாரியில் ஏறிச்செல்லும் செல்வத்திலே சிறந்தவன்.