பக்கம் எண் :

சிறுபாணாற்றுப்படை 73

பெரிய தேரினை அம் முல்லைக்கொடி-படரும் அதன் அருகிலே நிறுத்தி வைத்தான். இவன் விளங்குகின்ற வெண்மையான அருவிகளையுடைய பறம்பு மலையின் தலைவன்: பாரியென்னும் பெயருடையவன்.

சுரும்புண
நறுவீ உறைக்கும் நாகம் நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப், பெருந்தேர் நல்கிய,
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்,
பறம்பின் கோமான், பாரியும்;                     (87--91)

வள்ளல் காரி

உலகம் வியக்கும்படி-ஒலிக்கின்ற மணிகளையும், வெண்மையான பிடரி மயிரினையும் உடைய குதிரைகளையும், ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்களுக்கு இல்லையென்னாமல் ஈந்தவன். நெருப்பைப் போல் சுடர்விடுகின்ற-பகைவர்களுக்குப் பயங்கரமாகக் காணப்படுகின்ற-நீண்ட வேற்படையை உடையவன்; வீரக்கழலையும், தோள் வளையத்தையும் அணிந்தவன்; நீண்ட கையை உடையவன் காரி என்பவன்.

கறங்குமணி
வால் உளைப் புரவியொடுவையகம் மருள.
ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்.
கழல், தொடித் தடக்கைக் காரியும்.                (91--95)

வள்ளல் ஆய்

ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று-தனக்குக் கொடுத்த ஓர் அரிய ஆடையைக் கல்லாலின்