அதே நேரம் பேச்சுக் குரல் நெருங்கியது. காலடி ஓசை கேட்டது. தேனீயின் முகத்தில் மிரட்சி. சேரனைப் போய் விடுமாறு சைகை செய்தான். சேரன் எழுந்து நின்றான். “கொலையாகப் போகிறவர் யார் ஐயா?” தேனீ மூச்சு வாங்க வாயைத் திறந்தான். குரல் எழும்பவில்லை. “கு... . கு... . ம... ம... .” நா குழறிய தேனீயின் தலை சட்டென்று பக்கவாட்டில் சாய்ந்தது. தேனீ இறந்து விட்டான் என்பதைச் சேரன் தெரிந்து கொண்டான். அப்போது... பளீர் என்று டார்ச் ஒளி சேரன் முகத்தில் பட்டது. மேலே சாலையில் சிலர் நின்றிருந்தனர். டார்ச் ஒளி நகர்ந்து, கீழே கிடந்த தேனீமீது படர்ந்தது. மறுகணம்... “அதோ அவன் !” என்று ஒரு குரல் கேட்டது ! சேரனுக்கு வந்தவர்கள் யார் என்பது தெரிந்து விட்டது. அவன் அங்கிருந்து ஓடத் தொடங்கினான். “அந்தப் பையனைப் பிடி ! விடாதே !” |