பக்கம் எண் :

46 

கார் வேகமாகச் சீறிப் பாய்ந்தது. பின்னே வந்த அம்பாசிடரும் அதே வேகத்தில் வந்தது. இரண்டுக்கும் இடையே இருந்த தூரம் மாறவில்லை.

அம்பாசிடரில் வருபவர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான் சேரன்.

‘நேற்றிரவு அவர்களிடமிருந்து தப்பிவிட்டேன். இப்போது எப்படித் தப்புவது’

சேரன் கவலையடைந்தான். அடிக்கடி பின்னே திரும்பி அம்பாசிடரைப் பார்த்தபடியிருந்தான்.

சேரன் வந்த கார் சேரிங்கிராஸை அடைந்து, திரும்பி சூப்பர் மார்க்கெட்டைக் கடந்து சென்றது. சிறிது தூரத்தில் உதகையின் பிரதான மார்க்கெட். அதற்கு முன்னே சாலை Y போல இரண்டாகப் பிரிந்தது. மார்க்கெட், இரண்டு சாலைகளுக்கு நடுவே இருந்தது.

சேரன் வந்த கார் வலப்புறம் உள்ள சாலையில் செல்ல வேண்டும். அப்போது இடப்புறமிருந்த சாலையிலிருந்து ஒரு பெரிய லாரி வந்து கொண்டிருந்தது. அது நேராகச் செல்வதாகத்தான் தெரிந்தது. அதனால் டிரைவர் தன் வழியே காரைச் செலுத்தினான். வேகத்தைக் குறைக்காமல் செலுத்தினான். அதே நேரத்தில் எதிரே இடப்புறச் சாலையில் வந்த லாரி ஒரு ‘யூ டர்ன்’ போட்டுத் திரும்பி, வலப்புறச் சாலையில் செல்ல முயன்றது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத டிரைவர், காரை நடைபாதையை உரசியபடி ஓட்ட, லாரிக்காரன் திடீர் பிரேக் போட்டான்.

சேரன் வந்த கார் மயிரிழையில் தப்பிச் செல்ல, இடையே புகுந்த லாரி, சாலையின் குறுக்கே நின்றது. அதனால், பின் தொடர்ந்த அம்பாசிடர், லாரிக்கு மறுபுறம் நின்றுவிட்டது.