எங்கள் பெண்கள், கேள்வி ஞானம் மிகவும் உடையவர்கள். சொந்தப்படிப்பு இல்லாவிட்டாலும் யாரையாவது கூப்பிட்டு, அல்லி, அரசாணிமாலை, புலந்திரன் தூது, பவளக்கொடி மாலை முதலிய அறிவுப் புதையல் நூற்களை வாசிக்கச் சொல்லிக் கும்பலாய்க் கூடிக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்! எங்கள் பெண்கள் நாகரிகமான உடை உடுத்துவார்கள். பட்டுச் சேலையாய் இருந்துவிட்டால் 18 முழமாக இருந்தாலும், 36 முழமாக இருந்தாலும் சுமக்கத் தயார்! உரலானது வெள்ளியாயிருந்தால், அதையும் கால்காப்பாக மாட்டிக்கொள்ளப் பின்னடைய மாட்டார்கள்! எந்தப் பொருளும் கூடவராதென்றும், பச்சைகுத்திக் கொள்வதுதான் செத்தபின் கூட வருகிறதென்றும் எண்ணிக் கைநிறையக் குத்திக் கொள்வதோடு, நெற்றியில் ஜாடியும் அதில் செடியும் இருப்பதுபோல் குத்திக்கொள்வதும் உண்டு. மணமுள்ள பூக்களை, புல் சுமைக்குப் பதிலாகத் தலையில் சுமந்து கொள்வார்கள். சாகப்போகும் பெண்டிர்களும், திருவிழாவின் பேர் சொன்ன மாத்திரத்தில், தம் அரை டஜன் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு கிளம்புவார்கள். கணவனே தெய்வமென்றும், அவன் வார்த்தைகளே தேவவாக்கு என்றும் எண்ணிக் கணவர்களிடம் தங்களை ஒரு எருமுட்டைகளாக்கித், தம்மையே தியாகம் பண்ணிக் கொள்வார்கள்! மற்றொரு விஷயம்! எங்கள் நாட்டுப் பெண்களிடம் சங்கீதம் பிறந்தது! இங்கிருந்துதான், சங்கீதமென்பதே வெளிக்குத் தெரிந்தது. நடனமும் இப்படியே. சாவு வீட்டில் எங்கள் பெண்மக்கள் ஒப்பனை வைத்து அழுவதையும், அழுதுகொண்டே எழுந்துநின்று சுற்றிவந்து மார்பில் அடித்துக்கொள்வதையும் பார்த்தாலே இவ்விஷயம் தெரியும்! சீதை, துரோபதை, நளாயினி, அருந்ததி, வெள்ளி, சனி, பூரணி, பொற்கிளை, நல்லதங்கை இவர்களின் சந்ததி |